இந்திய மோட்டார் ஸ்போர்ட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, சிடிஆர்-ஜேகே டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 சென்னையில் ஆகஸ்ட் 19ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், எஃப்ஐஏ உலக மோட்டார் விளையாட்டு கவுன்சில் உறுப்பினரும், எஃப்ஐஏ சர்வதேச கார்ட்டிங் ஆணையத் தலைவருமான அக்பர் இப்ராஹிம், FMSCI தலைவரான அரிந்தம் கோஷ், சென்னை டர்போ ரைடர்ஸ் இயக்குநரும் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஸ்வேதா சுந்தீப் ஆனந்த், ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுடன் FMSCI கவுன்சிலர்கள், சாம்பியன்ஷிப் அணிகள் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப், இந்தியாவின் முதன்மையான சர்க்யூட் கார் பந்தய சாம்பியன்ஷிப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், ஆதித்யா பட்டேல் மற்றும் குஷ் மைனி உள்ளிட்ட பல முன்னணி பந்தய வீரர்கள் இந்த சாம்பியன்ஷிப் மூலம் உருவாகியுள்ளனர்.
2026 பருவத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜேகே டயர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன், இந்திய மோட்டார்ஸ்போர்ட் சூழலியலை மேலும் வலுப்படுத்துவதோடு, அடுத்த தலைமுறை பந்தய திறமைகளை உருவாக்கும் முக்கிய தளமாக இந்த சாம்பியன்ஷிப் செயல்பட உள்ளது.
இதுகுறித்து ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் ஸ்ரீனிவாசு அல்லாபன் கூறுகையில், “கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப், இந்திய மோட்டார்ஸ்போர்ட்டின் வளர்ச்சிக்கான ஜேகே டயரின் அர்ப்பணிப்பின் மையமாக இருந்து வருகிறது. பல தலைமுறைகளைச் சேர்ந்த திறமையான பந்தய வீரர்களுக்கு போட்டியிடவும், மோட்டார்ஸ்போர்ட்டின் உயர் நிலைகளுக்குச் செல்லவும் இந்த சாம்பியன்ஷிப் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 2026 பருவத்தை எதிர்நோக்கும் நிலையில், சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் FMSCI உடன் இணைந்து வளர்ந்து வரும் திறமைகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
2026-ம் ஆண்டுக்கான தற்காலிக பந்தய அட்டவணையின்படி, முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று அக்டோபர் 23 முதல் 25-ம் தேதி வரை அதே காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறும். மூன்றாவது சுற்று நவம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள பிரென் ரேஸ்வேயில் நடைபெற உள்ளது. நான்காவது மற்றும் இறுதி சுற்று டிசம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்டை வளர்ப்பதிலும், பிரபலப்படுத்துவதிலும் ஜேகே டயர் மோட்டார் ஸ்போர்ட் முன்னணியில் இருந்து வருகிறது. உலகத் தரத்திலான போட்டித் தளங்களை உருவாக்குவதுடன், மோட்டார் ஸ்போர்ட்டில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு சிறப்பு முயற்சிகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
சென்னை டர்போ ரைடர்ஸ் (CTR) தொழில்முறை மோட்டார்ஸ்போர்ட் அணியாகவும், மோட்டார் ஸ்போர்ட் சூழலியல் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு தனது அறிமுகப் பருவத்திலேயே F4 இந்திய சாம்பியன்ஷிப் பட்டத்தை CTR வென்றது குறிப்பிடத்தக்கது. அடிமட்ட பந்தயப் போட்டிகளில் இருந்து தொழில்முறை அளவிலான போட்டிகள் வரை திறமைகளை உருவாக்கி ஆதரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட தளத்தையும் CTR வழங்கி வருகிறது.
