பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா வெளியிட்ட கருத்துக்கு பதிலடி தரும் விதத்தில் யுவன் சங்கர் ராஜாவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.
மோடியும் அம்பேத்கரும் என்கிற தலைப்பில் வெளியான புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியை மறைந்த சட்டமேதை அம்பேத்கருடன் ஒப்பிட்டு அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இது என்னுடைய சொந்த கருத்து, யாருக்கு இதை எதிர்க்க முடியாது என்று இளையராஜா விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இந்த விவகாரம் இன்னும் முடிவடையவில்லை.
இளையராஜாவை எதிர்த்து பலரும் கருத்து கூறி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பா.ஜ.க-வின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, ‘கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன்’ என்று பதிவிட்டு தான் கருப்பு உடை அணிந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தந்தையின் கருத்து யுவன் சங்கர் ராஜாவின் மறைமுக எதிர்வினையாக இது இருக்கக்கூடும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் எதற்காக யுவன் இந்த புகைப்படத்தையும் கருத்தையும் பதிவிட்டுள்ளார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை