தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்:கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்காவிட்டால் இலங்கைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக படகுகள்:

கடந்த 2015 முதல் 2018 வரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளைத் திரும்பப் பெறுவதற்கான எந்த முயற்சியிலும் இந்திய அரசு ஈடுபடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் எல்லை தாண்டிய குற்றத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடமிருந்து ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இலங்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மீன்பிடிப் படகுகள் விரைவில் அழிக்கப்படுவதற்கும், ஏலத்தில் விற்பனை செய்வதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அலட்சியம்:

இந்த ஏல விற்பனைக்கு மத்திய அரசும், தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் இருந்து படகுகளை மீட்டுக் கொண்டு வர முடியாது என மத்திய, மாநில அரசுகள் கருதுவது தங்களது இயலாமையையே காட்டுகிறது.
மீன்பிடிப் படகுகளை இழக்கும் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு புதிய படகை முழு மானியத்தில் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை இழந்ததற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு தான்.

போராட்டம்:

தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லையெனில், இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் மீனவர்களை திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version