மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

வங்க கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மரங்களும் சாய்ந்து விழுந்தன.

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினார்கள். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version