உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிய வசதிகள்; சேதமடைந்த நிழற்குடைகளையும் சீரமைக்க திட்டம்
கோவை அவிநாசி சாலையில் பயணிகளின் வசதிக்காக புதிய பேருந்து நிழற்குடைகளை அமைக்கவும், சேதமடைந்த நிழற்குடைகளை சீரமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஜி.டி.நாயுடு மேம்பால கட்டுமானப் பணிகளின்போது அவிநாசி சாலையில் இருந்த பல பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதனால் வெயில் மற்றும் மழைக் காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான பகுதிகளில் பேருந்து நிழற்குடைகளை அமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை, 19 இடங்களில் பேருந்து நிழற்குடைகளை அமைப்பதற்காக கோவை மாநகராட்சிக்கு ரூ.2.64 கோடி வழங்கியது. அடையாளம் காணப்பட்ட 19 இடங்களில் 9 இடங்களில் பேருந்து நிழற்குடைகளே இல்லாத நிலையில், மற்ற இடங்களில் உள்ள சில நிழற்குடைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய நிழற்குடைகளை அமைத்து, ஏற்கெனவே உள்ளவற்றை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
