தமிழகத்தின் சாபக்கேடு.. மாணவனின் உயிர்பறித்த நீட் தேர்வு..தீர்வு தான் என்ன?

அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உயிரை பறித்து வருவது தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வால் மருத்துவர் ஆகும் வாய்ப்பை இழந்த ஏழைச்சிறுமி அனிதாவின், தற்கொலையால் தமிழக மக்களின் மனதில் ஏற்பட்ட காயம், இன்னும் பலர் நெஞ்சில் வடுவாக நிலைத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருவது பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வை ஒத்தி வைக்கக் கோரி பலரும் வழக்குகள் தொடர்ந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று அழுத்தமாகத் தெரிவித்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வு அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணையத் தொடக்கியுள்ளனர். அனிதா, ரித்து, வைஷியா,சுபஸ்ரீ என தமிழகத்தில் நீட்டால் உயிரிழந்த மாணவர்களின் பட்டியலில் தற்போது விக்னேஷும் இணைந்துள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version