உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் திருநங்கைகள் தனித்து விடப்பட்டாலும்,நமக்கு முன்னோடியாய் தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைகளுக்கென பசுமை வீடுகள் கட்டி புது வாழ்வாதாரத்தை அமைத்து கொடுத்து இருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 85 திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வேண்டும் என இந்தியாவின் முதல் திருநங்கை பொறியாளரும், சமூகசெயற்பாட்டாளருமான கிரேஸ்பானு தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து ஆட்சியரின் வழிகாட்டுதலில்,30 பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டது.மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் இவர்களுக்கு மாட்டு தொழுவம் அமைத்து கறவை மாடுகள் வாங்க கடன் உதவி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.இவர்களின் வாழ்க்கை தரம் உயர அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி கொடுத்த தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நகருக்கு அவர் பெயரையே சூட்டப்பட்டுள்ளது.
பால்பண்ணை :
இந்தியாவில் திருநங்கைகளுக்கென பிரதியேக கூட்டுறவு பால் பண்ணை முதல் முறையாக சந்தீப் நந்தூரி நகரில் இயங்குகிறது .இதில் முதல் கட்டமாக தலா ஒருவருக்கு ஒரு கறவை மாடு வாங்கி இங்கு கறக்கும் பாலை விற்பனை செய்ய ஏதுவாக, மந்தித்தோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை புதியதாக தொடங்கினோம். இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 300 லிட்டர் பாலை ஆவின் பால் நிலையத்துக்கு வழங்கி வருகிறார்கள்.மேலும் அவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2.5 ஏக்கர் நிலத்தில் வீடு, மாட்டு தொழுவம் ஒன்றரை ஏக்கரில் அமைத்தது போக மீதமுள்ள ஒரு ஏக்கரில் தையல், கணினி பயிற்சி அமைத்து தருமாறு கேட்டுவருகின்றனர். இது அவர்களின் திறமையை மட்டும் அல்லாது வாழ்க்கையின் மேம்பாட்டையும் உயர்த்த உதவும்.
இதே போல் இங்கு வசித்துவரும் 30 திருநங்கைகளில் 3 பேர் காவலர் தேர்வுக்கு படித்து வருகின்றனர் .மேலும் 6 பட்டதாரிகள் உள்ளதால், அனைவருக்கும் படிப்புக்கு தகுந்த அரசு வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்தால் இவர்களின் சமூகம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் உயர்ந்துவிடும்.
கோயம்புத்தூர் :
கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கியுள்ளனர்.
இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே இந்த உணவகம் இயங்கிவருகிறது . தற்போது 10 பேர் ஒன்றாக இணைந்து இதை ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு U.W.C ஸ்வஸ்தி மற்றும் சி.எஸ்.ஐ, அப்பாசாமி கல்லூரியினர் உதவி செய்தும்,இந்த திருநங்கை 10 பேருக்கு எப்படி உணவகம் கையாள்வது என்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது 10 பேரால் இயங்கி வரும் இந்த உணவகமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இன்னும் 6 மாதங்களில் மற்றொரு கிளை ஆரம்பிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக திருநங்கை சமூக உறுப்பினர்கள் பலர் வேலை இழந்ததால், வேறொரு வேலைகளை தற்போதுள்ள சூழலில் தேடி கிடைக்க வாய்ப்பில்லை எனவே அவர்கள் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க கோயம்புத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் சங்கீதா ஏற்பாடு செய்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமாக கேன்டீனை சங்கீதா நடத்தி வருவதால், சமையல் வேலை அவர்களுக்கு முதன்மை தொழிலாக மாறிவிட்டது . எனவே, யாரையும் எதிர் பார்க்காமல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய உணவகத்தை திறந்து உள்ளனர்.இதில் உணவு தயாரித்தல், பேக்கேஜிங் மற்றும் டெலிவரி வரை அவர்களே முன் நின்று உணவகத்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது.