பிரபல இந்தி சினிமா நடிகை தீபிகா படுகோன் 2022 கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளதாக நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் திரைத்துறைக்காக நடத்தப்படும் நிகழ்வுகளின் முக்கியமானது கான்ஸ் சர்வதேச திரைப்பட விழா. பிரான்ஸ் நாட்டிலுள்ள் கான்ஸ் நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் உலகளவில் இருந்து பல்வேறு திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம்.
நடப்பாண்டில் 75-வது கான்ஸ் சர்வதேச திரைப்பட விழா வரும் மே 17 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரபல பிரான்ஸ் நாட்டு நடிகர் வின்செண்ட் லிண்டன் தலைமையில் நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தி திரையுலகத்தைச் சேர்ந்த தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். அவருடன் ரிபேக்கா ஹால், ஸ்வீடன் நாட்டு நடிகர் நூமி ரபேஸ், இத்தாலிய சினிமா நட்சத்திரம் ஜாஸ்மின் ட்ரைன்கா உள்ளிட்டோர் நடுவர் குழுவில் உள்ளனர்.