தொடரும் தேடுதல், மீட்புப் பணிகள்; வெளிநாட்டினரும் நூற்றுக்கணக்கில் தொடர்பில் இல்லை
நேபாளத்தை உலுக்கிய பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது. மேலும் 2,400-க்கும் அதிகமானோர் இன்னும் தொடர்பில் இல்லாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
சீன எல்லையை ஒட்டிய நேபாளத்தின் மலைப்பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம், போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
675 ஆக உயர்ந்த உயிரிழப்பு
சனிக்கிழமை காலையில் நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) வெளியிட்ட தகவலில் 626 பேர் உயிரிழந்ததாகவும், 2,426 பேர் தொடர்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது 4,451 பேர் மீட்கப்பட்டதாகவும் 101 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆணையம் கூறியது.
அதன்பிறகு மீட்புப் பணிகளில் மேலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
நேபாள காவல்துறை மாலை வெளியிட்ட update-ல் 669 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 2,362 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தது. இதற்குப் பின்னர் நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையத்தை மேற்கோள்காட்டி AFP வெளியிட்ட தகவலில் உயிரிழப்பு 675 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும்
NDRRMA வெளியிட்ட தகவலின்படி, தொடர்பில் இல்லாதவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரும் அடங்குகின்றனர். காலை நிலவரப்படி தொடர்பில் இல்லாத 2,426 பேரில் 517 பேர் வெளிநாட்டினர் என்றும், ஆற்றுப் பகுதியில் உள்ள நீர்மின் திட்டங்களில் பணிபுரிந்த 933 தொழிலாளர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேபாள ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் குடியேற்றம், சுங்கத்துறை அதிகாரிகளும் தொடர்பில் இல்லாதவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடினமான மீட்புப் பணி
பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் சேறும் சகதியும் பெருமளவில் தேங்கியுள்ளதுடன், மலைப்பகுதிகளின் புவியியல் அமைப்பும் மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மீட்புப் பணிகளும் இடையிடையே பாதிக்கப்பட்டன. மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக சில பகுதிகளில் மீட்புக் குழுவினரை தற்காலிகமாக வெளியேற்ற வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நேபாளத்திற்கு உதவிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக சிக்கலான மீட்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்காக வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை நேபாளம் நாடியுள்ளது.
