நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 781 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

8,186 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்; பூதே கோசி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் ஏற்பட்டு ஐந்து நாட்களைக் கடந்த நிலையிலும் 2,500-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணியும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 8,186 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 227 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

பூதே கோசியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

இதற்கிடையே பூதே கோசி ஆற்றில் வெள்ள நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ராசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேடுதல் பணி தொடர்கிறது

ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் நேபாளத்தின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் 2,500-க்கும் அதிகமாக இருப்பதால், மீட்புக் குழுக்கள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகின்றன. நேபாள வெளியுறவு அமைச்சகமும் மழைக்காலம் நீடிப்பதால் ஆறுகளின் நீர்வரத்து மற்றும் கீழ்ப்பகுதிகளில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. கூடுதல் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் போலி காணொளிகள்

இதற்கிடையே இன்று காலை வெளியாகியுள்ள மற்றொரு முக்கிய தகவலின்படி, நேபாள பேரிடரைத் தொடர்புபடுத்தி செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட காணொளிகள், பழைய பேரிடர் காட்சிகள் மற்றும் வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது காணாமல் போனவர்களைத் தேடும் குடும்பங்களுக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களை உறுதிப்படுத்தும் பணிக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக Kathmandu Post இன்று காலை தெரிவித்துள்ளது. எனவே பேரிடர் தொடர்பான உயிரிழப்பு, காணாமல் போனோர் மற்றும் மீட்பு எண்ணிக்கைகளுக்கு நேபாள அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பின்பற்றுவது முக்கியமாகிறது.

Exit mobile version