அமெரிக்காவில் குளிர்கால சூறாவளி; இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்..!

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர்.

இந்த வெடிகுண்டு சூறாவளி என்பது கனமழை அல்லது கடும் பனியை தோற்றுவிக்க கூடியது. கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும். சில நீர்நிலைகளில் இதனால், பல அடி உயரத்திற்கு அலைகளும் எழுந்து காணப்பட்டன. குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

விமான சேவை பாதிக்கப்பட்டது. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர். இதனால், அமெரிக்காவில் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழ் சென்றுள்ளது. குளிர்காற்றும் வீசி வருகிறது.

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாரான மக்கள் பலர் விடுமுறை கொண்டாட்டங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கனடாவின் டொராண்டோ நகரிலும் கடும் குளிரால் விடுமுறைக்கான ஷாப்பிங் செல்வது குறைந்து விட்டது. அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமான சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டும், 7,600 விமானங்கள் காலதாமத்துடன் இயக்கப்பட்டும் உள்ளன.

சாலைகள் பனிச்சறுக்கு போட்டியில் செல்வது போன்று பனி படர்ந்து காணப்படுகின்றன. இதனால், வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. இதனையொட்டி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் காணப்படுகிறது. அமெரிக்காவில் குளிர்கால புயலால் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விடுமுறை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் இந்த ஆண்டும் களைகட்டாமல் போயுள்ளன என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Exit mobile version