வயிற்று வலியை குணப்படுத்துவதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பூசாரியை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தது காவல்துறை.
புதுக்கோட்டை மாவட்டத்தை அன்னவாசல் என்கிற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தீராத வயிற்று வலியால் மகள் அவதிப்படுவதை கண்ட பெற்றோர், கோயில் பூசாரியிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஊராளி கருப்பர் கோயிலில் பூசாரியாக இருக்கும் பழனி (65) என்பவரிடம் மகளை அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அவரும் சிறுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வயிற்று வலியை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய சிறுமியின் தாயார் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குறிபார்க்கும் அறைக்கு சிறுமியை மட்டும் அழைத்துக் கொண்டு போயுள்ளார் பழனி. அவருடைய தாயாரை வெளியே நிற்கவைத்துவிட்டார்.
பூஜை முடிந்து வீட்டுக்கு வந்த சில நாட்களில், சிறுமிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பூசாரி பழனி, பூஜை என்று கூறிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
உடனடியாக போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த சம்பவத்தை கீரனூர் அனைத்து மகளிர் காவல்துறை பதிவு செய்தது. இதையடுத்து பூசாரி பழனியை கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.