8 அணிகள் மோதும் டி20 தொடர் துபாயில் ஆரம்பம்; செப்.5-ல் இந்தியா–பாகிஸ்தான் பலப்பரீட்சை
எட்டு அணிகள் பங்கேற்கும் 2026 மகளிர் டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் தொடங்குகிறது.
தொடக்கப் போட்டியில் தாய்லாந்து மற்றும் ஹாங்காங் சீனா மகளிர் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் சீனா ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் குரூப் பி பிரிவில் உள்ளன.
இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தாய்லாந்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 3-ஆம் தேதி ஹாங்காங் சீனாவையும், செப்டம்பர் 5-ஆம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் செப்டம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளிலும், இறுதிப்போட்டி செப்டம்பர் 13-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணைக் கேப்டனாகவும் உள்ளனர்.
இதற்கிடையே, தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆசியக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரதிகா ராவல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசியக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா கருதப்படும் நிலையில், செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் இந்தியா–பாகிஸ்தான் போட்டி தொடரின் முக்கியமான லீக் ஆட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.
