பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்டு 1 முதல் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இந்நிலையில் விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், முதல் போக பாசனத்திற்கு ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 28 வரை, 120 நாட்களுக்கு 8,812.80 மி.கன அடி தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.






