தலை முடி கொட்டாமல் இருக்க வேண்டுமா? நன்கு அடர்த்தியுடன் வளர வேண்டுமா? இதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்
- தேங்காய் எண்ணெய்
- வெந்தயம்
- சீரகம்
- கஸ்தூரி மஞ்சள்
- பூலாங்கிழங்கு
- வெட்டிவேர்
- விளாமிச்சை வேர்
- கருவேப்பிலை
- பொன்னாங்கண்ணி
- கீழாநெல்லி
- திருநீற்று பச்சிலை
- கரிசலாங்கண்ணி,
- சோற்று பச்சிலை,
- நெல்லி,
- சோற்றுக் கற்றாழை

- தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்றுப் பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி வேர், கரிசலாங்கண்ணி, நெல்லிச்சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.
- இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும்.
- அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறியவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.
கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய் அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.
குறிப்பு: எண்ணெய் முழுவதும் மூலிகை எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து விடலாம்.




