– ந. திருக்காமு

“பக்தா உன் பக்திக்கு மெச்சினேன்.”
“யாரது?”
“என்னைத் தெரியவில்லையா, நன்றாகப் பார்.
“தெய்வமே, ஒம் நமச்சிவாய வாழ்க! பரமசிவா, நான் வணங்கும் ஈசனே, என்னே என் பாக்கியம்”, “மெய் சிலிர்த்து கரம் குவித்து சாஷ்டாங்கமாக தரையில் என்னைக் கிடத்தி வணங்கினேன்.
உண்மையில் சிவன் என் முன் காட்சித் தருகிறார். சினிமாவில் வருவதுபோல் அலங்காரமாக பளிச்சென்று நிற்கிறார். என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.
ஆஹா, என்னமோ வரம் தரப்போகிறார், என்ன கேட்கலாம், என்று ஒரு ஷணம் நினைத்ததும்…
“பக்தா, உனக்கு வரம்தர நான் வரவில்லை,? ‘மைன்ட் வாய்ஸ்’ புரிந்துக் கொண்டார்.
“பின்னே….?”
“உனக்கான நேரம் வந்துவிட்டது. புறப்பட்டு வா என்னுடன்?”
“எங்கே வரவேண்டும்?”
“சொர்க்கத்திற்கு.”
“சொர்க்கமா!, ஆஹா, நான் கேள்விப்பட்டிருக்கிறேன், இதுவரைப் பார்த்ததில்லை. எத்தனை நாள் டூர், எப்ப திரும்பிவருவேன்?”
“திரும்புவதா, இயலாது.”
“அப்படீன்னா செத்துப்போறதா?”
“ஆம். உன் மரணம்.”
“முடியாது. இந்த ஆட்டத்துக்கு நான் வரலை, என்னை விட்டுவிடு இறைவா.”
படுக்கையில் புரண்டேன், விழித்துக்கொண்டேன்…. நல்லவேளை இது கனவு… பயங்கரமான கனவு. ஏசியில் உடம்பு குப்பென்று வியர்த்து படுக்கை நனைந்தது.
சிவ சிவா, இப்படியொரு கனவா வரவேண்டும். பக்கத்தில் மனைவி, சங்கரி நிம்மதியாக உறங்குகிறாள். அவள் முத்தில் சந்தோஷம் தெரிகிறது. இருக்காதா பின்னே, எண்ணிப் பத்தாவது நாள் என் ஒரே மகள் பூவரசுவுக்கு கல்யாணம். அவள் ஒரு டாக்டர். அமெரிக்க மாப்பிள்ளை. பூவரசு அங்கே சென்று, மேலே படிக்கப்போகிறாள்.
சொல்லுங்க சார், இந்த நிலையில் இப்படி ஒரு கனவு வரலாமா?
“பக்தா இது கனவல்ல நிஜம்,” என்ற குரல் கேட்டு மிரண்டுபோய் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துக் கொண்டேன்.
ஆமாம், எதிரில் சாட்சாத் பரமசிவன்?
சிவனைப் பார்க்க பக்திப் பரவசம் வரவில்லை. பயமா இருக்கு. இவர் ஏன் என்னையே சுற்றி சுற்றி வருகிறார். கனவு என்று நினைத்தேன், நேரில் நிற்கிறார். என்ன செய்வது. ரொம்பத்தான் பக்திமானாக இருந்துவிட்டோமோ?
தினம் காலையில் அரைமணி நேரம் பூஜையில் மெய் மறந்தேன். இன்னும் விஷேச நாட்களில், அமாவாசை, கிருத்திகை மற்றும் பண்டிகை தினங்களில் விக்ரகங்களை தனித்தனியே அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்கரித்து, தீப ஆராதனை செய்வேன்… உயர்ந்த ஊதுபத்தி, ஜவ்வாது, சாம்பிராணி மணம் எப்போதும் வீடு நிறைந்திருக்கும். ஞாயிறு தினங்களில் முற்றோதல் என்று பக்தி கொஞ்சம் அதிகம் தான். அதற்காக மெச்சி பாராட்ட வேண்டிய இறைவன் பரலோகம் கூப்பிடுகிறாரே, நியாயமா?
“பக்தா என்ன யோசிக்கிறாய்? உனக்கான நேரம் வந்திவிட்டது, உடனே புறப்படு என்னுடன்.”
“தெய்வமே, இறைவா, சாமி, ஐயா என்னை விட்டுவிடு, நீ வீடு மாறி வந்து விட்டாய். நீ அழைத்துச் செல்ல வேண்டியவன் பக்கத்து வீட்டில் இருக்கும் என்பத்தியாறு வயதில் ஒரு கிழவன்… இப்பவோ அப்பவோன்னு கிடக்கான், அவன புடிச்சிப்போகக் கூடாதா?”
“வீண் விவாதம் வேண்டாம், புறப்படு,”
எம்பெருமானே, ஒரு நிமிடம், எழுந்து வேகமா ஓடி, பூஜையில் வைத்திருந்த என் பெண் பூவரசியின் கல்யாணப் பத்திரிக்கைகளை அள்ளிக்கொண்டு வந்து இறைவனின் கால்களில் கொட்டினேன், ரூமு முழுவதும் சிதறி விழுந்தன.
“எண்ணி பத்தாவது நாள் என் ஒரே பொண்ணுக்கு கோலாகலமாக திருமணம் வைத்திருக்கிறேன். அமெரிக்க மாப்பிள்ளை, எண்ணி இருபதாவது நாள் மாப்பிள்ளையோடு அமெரிக்கா போய்டுவா. அதுவரை எனக்கு உயிர்ப் பிச்சைக்கொடு. ஆசை ஆசையா வளர்த்த ஒரே பொண்ணு, பூவரசி. அவ வாழ்க்கையை நாசமாக்கிடாதே. இப்ப எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சின்னா, என் குடும்பமே காலி. அதிர்ஷ்டம் இல்லாதவள்னு பின்னாளில் அவளுக்குக் கல்யாணமே இல்லாமப் போயிடும். இதெல்லாம் உனக்குத் தெரியாதா? புரியாதா?… இந்தக் கல்யாணம் முடியும் வரை எனக்கு லீவு கொடேன்.”
இறைவன் சற்று யோசிக்கிறார் போலும், அமைதியா இருக்கார். குடும்பஸ்த்தவனாயிற்றே இதெல்லாம் தெரியாதா?
“உன் வேண்டுதலை ஏற்கிறோம், திருமணம் முடிந்ததும் உன்னை அழைத்துக் கொள்வோம்,”
கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொள்கிறேன்.
“பக்தா கவனத்தில் கொள். யாம் உன்னை விட்டு அகலமாட்டேன்.”
“ராத்திரியில் நான் தூங்கும்போது?”
“யான் விழித்துக்கொண்டிருப்பேன். நன்றாக நினைவில் கொள்… இன்னும் பத்து நாட்கள்தான் உனக்கு ஆயுள்.”
“தோ பார் சாமி…”
என்ன பக்தா மரியாதை குறைகிறது?
“இருக்கப்போவது பத்து நாளுன்னு முடிவாயிடுத்து… அப்புறம் என்ன மரியாதை, கல்யாண விஷயமா அங்கே இங்கேன்னு அலைஞ்சிக்கிட்டிருப்பேன்….
“பக்தா நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நான் எதையும் தடுக்க மாட்டேன், ஒரு பார்வையாளனாக இருப்பேன். கவனி, முக்கியமான விஷயம் நான் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவேன், அப்புறம்,”
“அதான் எனக்குத் தெரியுமே, இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது, தெரிந்தால் நான் மண்டை வெடித்து செத்துடுவேன், எத்தனைப் படங்களில் பார்த்திருப்பேன்.”
சிரித்துக்கொண்டார். தெய்வீகச் சிரிப்பு.
படுக்கையை விட்டு எழுந்த சங்கரி, “என்னது பூஜையில் வைத்த கல்யாணப் பத்திரிக்கையெல்லாம் பெட்ரூமில் இறைஞ்சிக் கெடக்கு?” என்று கத்தினாள்.
“இல்லை எல்லோர் பேரும் இருக்கா, யாராவது விடுபட்டுப் போச்சான்னு செக் பண்ணேன்.”
“பைத்தியமா உங்களுக்கு, ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்தாச்சி, கல்யாணத்துக்கு இன்னும் பத்துநாள்தான் இருக்கு, இப்பப்போய் கல்யாயாணப் பத்திரிக்கையை படிச்சா… என்னது பைத்தியக்காரத்தனமா இருக்கு.”
“இல்லை, இல்லை ஏதோ ஏதோ கனவு, சில நபர்களுக்கு பத்திரிக்கை குடுக்கவில்லைனு அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.”
“சரி, சரி மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து வர்றார், வரவேற்க ஏர்போர்ட் போகணும், சீக்கிரம் கிளம்பி வாங்க,”
“நீ இப்பதானே எந்திரிச்ச, உனக்குமுன் நான் ரெடியாகிடுவேன்”
கல்யாண வேலைகள் தனித்தனியாக கவனிக்காமல், மண்டப அலங்காரம், பூமாலைகள், சாப்பாடு என்று சகலத்துக்கும் ஒரே ஆள் மாணிக்கம் வந்துப் பணம் வாங்கிக்கொண்டு போனான்.
“பக்தா இன்னும் ஐந்து நாட்கள்,” கடவுளின் எச்சரிக்கை…
“அதுக்காக, தாலிகட்டி முடிந்ததும் உடனே என் உயிரை எடுத்து மணமேடையை பிணமேடையாக்கி மண்டபத்தை எழவு வீடாக்கிடாதே, பொண்ணு மறுவீடு முடியும்வரை பொறுக்க முடியாதா?”
“பத்து நாட்களே உனக்கு அதிகமில்லையா?”
“நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள், கொஞ்சம் மனிதாபிமானத்தோடு பாரும் புரியும்”
“ஆகட்டும் பார்க்கலாம்”.
“இது என்ன காமராஜர் பதில் போல?,”
“உன் உயிர் பிரியும் கடைசி நாளன்று சொல்லிடுவேன், அன்று இரவுதான் கடைசி தூக்கம், மறுநாள் விழிப்பு கிடையாது. ஜனனத்தின் பயணம் மரணம் தானே!”
“தத்துவம், நல்லது. இதெல்லாம் நல்லாதான் இருக்கு. பக்கத்து வீட்ல ஒரு கெழம், அதான் சொன்னேனே, அனாதையா கெடக்கு, அதுக்கு மரணமே கிடையாதா?
சாமி இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டார், ஒரு பார்வையோடு சரி. கல்யாண வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.
கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள்.
சாவை மறந்து நல்ல தூக்கம், மனைவி சங்கரியின் கைகள் என் மீது, மிக நெருக்கமாக படுத்து என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள். ஐயோ என்னது இவளுக்கு மூடு வந்துவிட்டது, எனக்கும் இதுதான் கடைசி சந்தர்ப்பமா இருக்கும். சாமி பார்த்துண்டே ஒருப்பாரே? வலுக்கட்டாயமாக அவளை விலக்கினேன்.
“ஏன்? என்ன?” அவள் முனகினாள்.
இந்த ரூமில் நாம இரண்டுபேர் மட்டுமல்ல, இன்னொருத்தரும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று எப்படி சொல்வேன். சொன்னால் உடனே செத்துடுவேனே. அப்படித்தானே யாரிடமும் சொல்லக்கூடாது, என்பது சத்திய வாக்காயிற்றே.
“கல்யாண அலச்சல், ரொம்ப டயர்டா இருக்கு.”
“சரி சரி,” திரும்பிக் கொண்டாள்.
நாட்கள் நகர்ந்து, நகர்ந்து திருமண நாளும் வந்தது.
மண்டபம் நிரம்பி வழிந்தது. கம்பீரமும், மகிழ்ச்சியும், கர்வமும் குடியிருக்கவேண்டிய முகத்தில், சாவுக்களை தவழ்ந்தது.
திருமண வரவேற்பு.
பொண்ணும், பிள்ளையும் சிரிப்பு மாறாமல் அலங்காரத்துடன் நின்றிருந்தனர். ஒரு பக்கம் இன்னிசை நிகழ்ச்சி, சினிமா பாடல்கள் சத்தமாக அலறின. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியவில்லை. முக மலர்ச்சி மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இவ்வளவையும் இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
சாகப்போகிறோம் என்று தெரிந்து வாழ்வது கொடுமையானது. பத்து நாட்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். கல்யாணம் முடிந்த ஒரு நாளோ, ரெண்டு நாளோ… ஆனால் ஒரு விஷயம், இந்தப் பத்து நாட்களாக நான் ரொம்ப நல்லவனாக வாழ்ந்துக்
கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம். எல்லோரிடமும் நல்லவனா இருக்கேன்…
“ஐயா…”
“என்ன சொல்லு,”
“நம்ம பொண்ணு கல்யாணம்”
“அதுக்கு உனக்குப் பத்திரிகை குடுக்கலியா?”
“ஐயோ அப்படி இல்லீங்கய்யா”
“பின்னே என்னா சொல்லு”
“எங்களுக்குத் துணிமணி எடுக்க ஏதாவது குடுங்கய்யா?”
இருபது வருடமா வேலைசெய்யும் சாமிநாதன் தலையைச் சொரிய, அவன் எதிர்பாராத விதமா பத்தாயிரம் ரூபா கொடுத்து “நீ, உன் பொண்டாட்டி, பொண்ணுங்க எல்லாத்துக்கும் துணிமணி எடுத்துக்கோ,” என்று கொடுத்தேன்.
என் காலில் விழுந்து கண்ணீர் சிந்தினான். இப்படி தாராளப் பிரபுவாக எப்போதும்… அவனிடம்… ஏன், யாரிடமும் நடந்துக் கொண்டதில்லை.
சங்கரி கத்தினாள்.
‘என்னடி வாழ்க்கை, இருக்கப்போவது இன்னும் சில நாட்களே, நாலு பேருக்கு புண்ணியம் பண்ணிட்டுப் போறனே’, இது மைன்ட் வாய்ஸ்.
“இல்லை கவனித்துக்கொண்டு தான் இருக்கேன். கொஞ்சம் நாளா நீங்க சரியில்லை. உலக மகா கஞ்சனா இருந்தவர், கை தாராளமாக நீளுது. பொண்ணுக் கல்யாணம் ஆளே மாறிட்டீங்க. பேய் பிடிச்ச மாதிரி அலையிறீங்க,”
‘பிடிச்சிருப்பது பேய் இல்லை சிவன்’, மைன்ட் வாய்ஸ்…
“ஆமாம் தினம் காலையில் பூஜை நடக்கும், இப்ப காணோமே?”
“கல்யாண மும்முரத்தில் டைம் இல்லை.”
‘அதான் நாள் குறிச்சிட்டப் பிறகு பூஜை புனஸ்காரம் எதுக்கு? பூஜை செய்யப்படும் சிவனேதான் என்னோடு சுத்திக் கொண்டிருக்கிறாரே?’
மறுவீடு, பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். நிகழ்ச்சி நிரல்கள் சரியாக நடந்துக்கொண்டிருக்கும்போது சிவனிடமிருந்து சிக்னல்.
இன்று இரவு உனக்கு கடைசி இரவு.
இவ்வளவு நாட்களாக பயந்து, பயந்து மரணத்தை எதிர்கொண்டதில் தைரியம் வந்துவிட்டது.
அன்று மாலை கோவிலுக்குப் போனோம், கடைசிக் கோவில்.
சினிமாவுக்குப் போனோம். கடைசி சினிமா. படுக்கப்போகும் முன் மகளை உச்சி முகர்ந்து முத்தமிட்டேன். கடைசி முத்தம். மாப்பிள்ளையைப் பார்த்துச் சிரித்தேன். கடைசி சிரிப்பு. படுக்கையில் விழுந்தேன். கடைசி படுக்கை. சங்கரி படுத்தவுடன் தூங்கி விட்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோடு வாழ்ந்த வாழ்க்கை கன்னா பின்னாவென்று நினைவலைகள்.
கல்யாண வீடு காலையில் சாவு வீடு. கண்ணாடி பெட்டியில் கிடத்தியிருப்பார்கள். வீடு முழக்க அழுகையும், ஒப்பாரியுமாக இருக்கும். தாரை தப்பட்டை காது கிழியும்.
இதிலிருந்து விடுபட திருவாசகம் பாட ஆரம்பித்தேன். கடைசி பாட்டு. பாட்டு நாயகனே, கேட்குதா?
நமசிவாய வாழ்க,
நாதன்தாள் வாழ்க….
விழித்துக்கொண்ட சங்கரி, “என்ன தூங்கவிடாம…”
“இல்லை திருவாசகம் படிக்கிறேன்.”
“இந்த நேரத்திலா?”
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதுல்ல, ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்.”
“சரி, சரி, எனக்குத் தூக்கம் வருது, மெல்லமா…”
“சரிம்மா,”
சிவனைப் பார்த்துக்கொண்டே, முற்றோதல் தொடர்ந்தது.
அப்படியே தூங்கிட்டேன்.
இசையுடன் கூடிய ஹால் கிளாக் எட்டுமுறை அடித்தது.
விழித்துக்கொண்டேன். எப்படி, எப்படி? நான் இன்னும் சாகலையா? பிழைத்துக் கொண்டேனா! சிவனைப் பார்த்தேன்… காணோம். பக்கத்தில் சங்கரி இல்லை. அழுத்தமாக கிள்ளிப்பார்த்தேன். பயங்கரமா வலித்தது. அப்படின்னா… அப்படின்னா…. அப்படித்தான்…
– கதைப் படிக்கலாம் – 85
இதையும் படியுங்கள் : “தோழமை”




