ஊரடங்கின்போது ரத்தான முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான கட்டண தொகையை திருப்பி வழங்க, இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 23ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, மே 25ம் தேதி முதல் அனைத்து வகையான விமான சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
குறிப்பிட்ட அந்த இரண்டு மாதங்களில், திட்டமிடப்பட்டிருந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அதற்கு முன்பதிவு செய்த பயணியர், பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும், ரத்தான டிக்கெட்டுகளுக்கான கட்டண தொகையும் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அப்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில், முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணியருக்கும், கட்டண தொகையை திருப்பி வழங்க, இண்டிகோ விமான
நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா: ஊரடங்கால் எங்கள் நிறுவனத்தில், பணப்புழக்கம் முற்றிலும் இல்லாமல் போனது. அதன் காரணமாக, ரத்தான விமானங்களில் முன்பதிவு செய்த பயணியருக்கு, கட்டண தொகையை உடனடியாக செலுத்த முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டது. இப்போது, எங்கள் விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன.எனவே, அந்த பயணியருக்கு, கட்டண தொகையை திருப்பி வழங்கவேண்டிய கடமை, எங்களுக்கு உள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி, 31ம் தேதிக்குள், அனைத்து பயணியருக்கும், 100 சதவீத கட்டண தொகையை, திருப்பி வழங்க முடிவு செய்துஉள்ளோம் என கூறியுள்ளார்.