பொன்னியின் செல்வனில் இருந்து புறப்பட்டார் வந்தியதேவனாக நடித்து வந்த கார்த்தி.

மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல இந்திய திரையுலக பிரபலங்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு மைசூரில் உள்ளா அரண்மனையில் நடந்து வருகிறது. அங்கு படத்துக்கான முக்கிய பாடல் காட்சி ஒன்று படமாகி வருகிறது. அதில் வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தி கலந்து கொண்டு நடித்தார். இதோடு இவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
ஏற்கனவே இந்தப் படத்துக்கான தங்களது படப்பிடிப்பை ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் முடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது கார்த்தியும் தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இதுகுறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இளவரசி த்ரிஷா… நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசே ஜெயம் ரவி… என் பணியும் முடிந்தது’ என படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவையும், அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவியையும் டேக் செய்து தமிழில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது. விரைவில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




