சேலம் அருகே தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மங்களபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (33). இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு சீனிவாசன் (9) என்ற மகனும், கிருஷ்ணபிரியா (5) என்ற மகளும் இருந்தனர். முருகன் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் தங்கி அருகில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று தனது இரண்டு பிள்ளைகளையும் தான் வேலை செய்த ஹோட்டல் அருகில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச்சென்ற முருகன், தனது பிள்ளைகள் இருவரையும் மரத்தில் தூக்கிட்டு கொலை செய்தார். பின்னர் அவர்கள் தூக்கில் தொங்கியபடி இருப்பதை வீடியோ எடுத்து, இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க என்று பேசி அதனை திண்டுகல்லில் உள்ள அவரது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தானும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




