தமிழக அரசு அளித்த உறுதியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கங்கள் முடிவு; முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படத் துறையின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய திரைப்படங்களின் வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வழக்கம்போல் நடைபெற உள்ளன.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இன்று இந்த முடிவை அறிவித்துள்ளன. திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்ட பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான கால இடைவெளி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தமிழ்த் திரையுலகில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்துவது என்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஏ.ராஜ்மோகனை சந்தித்து திரைத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
திரைத்துறையின் கோரிக்கைகளை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரது வழிகாட்டுதலுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததாக தயாரிப்பாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த புதிய திரைப்பட வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இரு தயாரிப்பாளர் சங்கங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. இதனால் செப்டம்பர் மாதத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள தமிழ் திரைப்படங்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளுக்கு ஏற்பட்டிருந்த நிச்சயமற்ற நிலை தற்காலிகமாக நீங்கியுள்ளது. அதேநேரத்தில், திரைத்துறையின் நீண்டகால பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முன்னிலையில் நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.






