சென்னை, ஆக. 16-நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், தேவையின்றி வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இந்த மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முழு ஊரடங்கு:

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 15-ந் தேதி இரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஆகஸ்டு 16 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
வாகனங்கள் பறிமுதல்:

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




