மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட உரடங்கில், அன்லாக் என்ற முறையில் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது. அதில் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளித்து இருந்தாலும், பொதுப்போக்குவரத்திற்கான தடை நீடித்து வந்தது.
இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டதால், பொதுமக்களின் பயணங்கள் தடைபட்டது மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் பணியாற்றி வந்த பலருக்கு வேலைவாய்ப்பும் பறிபோனது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை.
மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுவதோடு, வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.
மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இ-பாஸிற்கு தளர்வுகள் வழமகிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கி விடும் என மக்கள் நம்பிக்கையில் உள்ளனர். இந்த சூழலில் மத்திய அரசின் இந்த கடிதம் அதை மேலும் வலுப்படுத்தி உள்ளது.




