கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய விற்பனை செப்டம்பர் 18-ந் தேதி திறக்கப்படும் என்றும், அங்கு காய்கறி மொத்த விற்பனை அங்காடி அடுத்த மாதம் 28-ந் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையும், சென்னையின் முக்கிய பகுதியுமான கோயம்பேடு சந்தை கொரோனா பரவலால் மூடப்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அங்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு நடத்தினார். பின்னர், அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோயம்பேடு வணிகசந்தை

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதை தொடர்ந்து காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்பட தொடங்கின.
மேலும், சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோர பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடியானது வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெறுகிறது.
நேரில் ஆய்வு
தற்காலிக சந்தைகளானது நகரப்பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தற்காலிக சந்தைகள் உள்ள பகுதிகளில் மழை நீர் வெகுவாக தேங்க வாய்ப்பு உள்ளதாலும், அப்பகுதியில் வியாபாரம் செய்வது கடினம் என்பதாலும் வணிகர் சங்க பிரதிநிதிகள் கடந்த மாதம் 14-ந் தேதி துணை முதல்வரையும், கடந்த 24-ந் தேதி முதல்வரையும் நேரில் சந்தித்து கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை திறந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை நேரில் ஆய்வு செய்து அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளான சாலைகளை சரி செய்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், கழிப்பிடங்களை சீரமைத்தல், மின்விளக்குகளை மாற்றியமைத்தல்போன்ற பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.
18-ந் தேதி திறப்பு

அப்பொழுது, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் துணை முதல்வர் தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாகதிறப்பது எனவும், முதற்கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை அடுத்த மாதம் 18-ந் தேதி, அதற்கு அடுத்த கட்டமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை அடுத்த மாதம் 28-ந் தேதியும், அதன்பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளைதிறக்க முடிவு செய்யப்பட்டது.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு
அவ்வாறு அங்காடிகளை திறக்கும் சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டு, வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள ‘பி’ சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இடதுபுறமாக திரும்பி, ‘இ’ சாலை வழியாக மலர் அங்காடிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே கொள்முதல் செய்வதற்கு அங்காடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்.
அதேபோல் அங்காடிக்கு வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் ‘ஏ’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு சமயத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அங்காடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு சரக்குகளை இறக்கி, அந்த வாகனம் வெளியில் சென்ற பிறகு அந்த கடைக்கு அடுத்த வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.
தனிநபர் கொள்முதலுக்கு தடை
கடைகளுக்கு வெளிபகுதிகளில், அங்காடியின் வேறு எந்தபகுதிகளிலும் சரக்குகளை இறக்கி வைப்பது மற்றும் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படாது. கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும். அவ்வாகனங்கள் சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினமே இரவு 12.00 மணிக்குள் அங்காடியை விட்டு வெளியில் சென்றுவிட வேண்டும்.
சில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்ய வரும் இலகுரக வாகனங்கள் அதிகாலையிலிருந்து பகல் 12 மணி வரை மட்டுமே அங்காடிக்குள் அனுமதிக்கப்படும். அங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி இல்லை. தனி நபர் கொள்முதல் முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சாலையோர விற்பனைக்கு தடை

அங்காடிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். தினமும் அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவ துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும். கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் மற்றும் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து நபர்களும், முகக்கவசம் அணிந்து இருப்பது கட்டாயம்.
அதேபோல, தனிநபர் இடைவெளி கடைபிடிக்கவேண்டியது மிகவும் கட்டாயமாக்கப்படும். கீரைகள் மற்றும் வாழை இலைகள் விற்பனை ஏற்கனவே இயங்கி வந்த 9ம் எண் நுழைவு வாயிலில் உள்ள கடைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சாலையோர விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.
வாரம் ஒருநாள் விடுமுறை
காவல் துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேற்கண்ட விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது உரிம விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




