ஊரடங்கு காலத்தில் 14 முதல் 29 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுகள் பரவாமல் தடுக்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

நான்கு மாதம் அமலில் இருந்த ஊரடங்கால், 14 முதல் 29 லட்சம் கொரோனா தொற்றுகள் தடுக்கப்பட்டதாகவும், 37000 முதல் 78000 மரணங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதை தெரிவித்த அவர், இந்த நான்கு மாதங்களையும், கூடுதல் சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், வென்டிலேட்டர், முழு உடல் கவசங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கவும் அரசு பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.
இதனால், தனிமை வார்டு படுக்கைகளின் எண்ணிக்கை 36.3 சதவிகிதமும், ஐ.சி.யூ படுக்கைகளின் எண்ணிக்கை 24.6 சதவிகிதமும் அதிகரித்தன என்றார் அவர். முழுஉடல் பாதுகாப்புகவச உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றதாகவும் அவர் கூறினார்.




