– பாமதி நாராயணன்

அந்தக் கல்யாண மண்டபத்தில் கீதா, மகேஷ் கல்யாணத்தின் முதல்நாள். கீதா அதிர்ஷ்டசாலி… கண்ணுக்கு லட்சணம், கைநிறைய சம்பளம்ன்னு அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சிருக்குன்னு மகிழ்ச்சியுடனும், தங்கள் பெண்ணுக்கு இப்படியொரு சம்மந்தம் வாய்க்கவில்லையே என்றப் பொறாமையுடனும்…. பற்பல உறவுகள், நண்பர்கள் புடைசூழ மாப்பிள்ளை அழைப்பு முடிந்து சாப்பாடு நடந்துக்கொண்டிருந்தது.
கீதாவின் அம்மா, அண்ணா ராஜா, அவன் மனைவி ரமா…. மூவர் முகத்தில் மட்டும் டென்ஷன் அப்பிக்கிடந்தது. மனம் முழுக்க அழுத்திய பாரத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சந்தோஷமாக இருப்பதுப் போல் போலியாக வளைய வந்துக்கொண்டிருந்தனர்…. காரணம்…. நாளைக்குக் கல்யாணம் நடக்குமா… என்ற இமாலயக் கவலைதான்..
“ராஜா… உன் ஃப்ரெண்ட் வாசு இப்படி ஏமாத்திட்டானே..” அம்மா மெதுவாகக் கேட்டாள்…
என்ன பதில் சொல்வான் ராஜா…. கீதாவுக்குப் போடவேண்டிய நகையில் சம்மந்தி மாமியிடம் ஒப்புக்கொண்டபடி நாற்பது பவுன் நகையையும் ரெடி பண்ண முடியாமல், இனிமேல் தான் வாங்க வேண்டும் என்ற நிலையில் இருந்த அந்தப் பத்து பவுன் பற்றிய கவலைதான் எல்லாரையும் பூதாகாரமாக பயமுறுத்தியது…
இன்று காலை பத்து மணிக்கெல்லாம் வாசு வந்துடுவான்.. உடனே கடைக்குப் போய் நகையை வாங்கி வந்துடலாம் என்று நம்பி, இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டேனே…..
பணத்துடன் வருகிறேன் என்று முந்தாநாள் டில்லியில் ரயில் ஏறிய உடனே ஃபோன்போட்டுச் சொன்ன நண்பன் வாசு ஏன் இன்னும் வரவில்லை…
“சாப்பாடு சூப்பர்டா ராஜா… என்னடா டல்லாயிருக்கே.. என் தங்கையை அமெரிக்கா மாப்பிள்ளக்குக் கொடுக்கப்போகிறோம். எங்களுக்கும் அமெரிக்கா பார்க்கிற சான்ஸ் கிடைக்கும் அப்படின்னெல்லாம் இன்விடேஷன் கொடுக்கும்போது எவ்வளவு குஷியாக பேசினாய்.…..” அவன் மனநிலைப் புரியாது, நண்பர்கள் கலாய்த்தார்கள்.
அப்போது சட்டைப்பையில் இருந்த கைப்பேசி ஒலித்தது….. வாசு தான் பேசினான்.
“ராஜா, எதிர்பாராத ஒரு இக்கட்டு. நான் வரும் இந்த ரயில் நாக்பூர் தாண்டி ஒரு இடத்திலே ஏதோ இயந்திரக் கோளாறினால் நின்றுவிட்டது. சரி செய்ய எட்டு மணி நேரம் ஆகி விட்டது. இப்பத்தான் நகர ஆரம்பித்திருக்கு. நாளைப் பகலுக்குள் வந்துடுவேன்.. சிக்னல் கிடைக்காததால் உனக்குத் தகவலும் தெரிவிக்க முடியவில்லை. ரொம்ப சாரிடா…”
“ரயிலில் இப்படி திடீர்னு பிரச்னை வந்தா, நீ என்ன பண்ணுவே.. ஜாக்கிரதையாக வந்துச் சேரு..” உரையாடலை முடித்தவனுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. அம்மாவிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னான்.
“என்னப்பா சொல்றே நீ… நாளை காலையில் பத்தரைக்கு முஹூர்த்தம். பெண்ணைக் கன்னிகா தானம் செய்து கொடுக்கும்போது, பேசியபடி அனைத்து நகைகளையும் அவள் அணிந்திருக்க வேண்டும் என்று சம்மந்தி மாமி கண்டிஷனாகவே சொல்லியிருக்கிறாரே. அவன் எப்போ வந்து, எப்போ நாம கடைக்குப் போய் நகை வாங்குறது…. நடக்கிற காரியமா.”
வாசு நாளை வந்துவிடுவான் என்றுக் கேட்டதும், தன்னைப் போலவே அம்மாவும் கவலை மறந்து ரிலாக்ஸாவார் என்று நினைத்தவனுக்கு, அம்மா சொன்னதும் கோபம் வந்தது…
“ஆமாங்க… அந்த மாமி எல்லா விஷயத்திற்கும் சம்ப்ரதாயம் பார்க்கிறா..” மனைவி ரமாவும் அம்மாவுடன் கூடப் பாடியதும் எரிச்சலுடன் கத்தினான்.
“நாம் வேண்டுமென்றா செய்கிறோம்…. எதிர்பாராமல் சூழ்நிலை இப்படி ஆயிடுத்து.. இப்போ அதனால் என்ன.. காலையில் போட்டுக்கொள்ள முடியாததை, மாலையில் ரிஸப்ஷன்போது பூட்டிக்கொள்ளட்டுமே. இப்போ என்ன….. நானே மாமியிடம் காலையில் பேசி கன்வின்ஸ் பண்ணி சமாளிக்கிறேன்.. எல்லாரும் தூங்கப் போங்கள்..”
அவன் கத்தலில் அறைக்கு வெளியே நடமாடியவர்கள் உள்ளே எட்டிப்பார்ப்பதைக் கவனித்த மாமியாரும் மருமகளும், எதுவும் பேசாமல் படுக்கைக்குச் சென்றனர்.
ராஜாவின் அப்பா, மகன் தான் எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறானே என்று முதல் பந்தியிலேயே சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டு, நாளைக்கு சீக்கிரமே எழுந்துக்கணும்னு படுத்து நிம்மதியாக தூங்கி விட்டார்.
அம்மாவுக்கோ, அருமைப் பெண்ணின் கல்யாணம் இப்படித் தொங்கலில் இருக்கே. அவளுக்கு இந்த மாப்பிள்ளை மகேஷை ரொம்பப் பிடித்திருக்கே.. கடவுளே நீதான் கல்யாணத்தை நடத்தணும்னு விடிய விடிய தவித்துக் கொண்டிருந்தாள்.
ராஜாவுக்குள்ளும் குற்ற உணர்வுகள்… தூங்க முடியாமல்… கீதாவைப் பெண் பார்த்த அன்று… மகேஷும், கீதாவும் உள்ளே தனியேப் பேசிக் கொண்டிருக்கும் போது, மகேஷின் அம்மா “பெண்ணுக்கு நாப்பது பவுன் நகை போடவேண்டும்… கல்யாணத்தன்று முகூர்த்த நேரம் பெண்ணைக் கன்யாதானம் செய்துக் கொடுக்கும்போது, கண்டிப்பாக நகைகள் அத்தனையையும் அவள் அணிந்திருக்க வேண்டும்… அதுதான் சம்பிரதாயம்’ என்று கண்டிஷன் போட்டதும் தன்னைத் தனியே அழைத்து, “நமக்கு இந்த சம்மந்தமே வேண்டாம்பா…. கல்யாணத்தை இன்னும் ஒரு மாதத்தில் செய்ய வேண்டுமாம்….. பவுன் விற்கிற விலையில் நம்மால் ஒரு மாசத்துக்குள் எப்படி பத்து பவுன் புரட்டமுடியும்..”
“அம்மாவும் அப்பாவும் தடுத்தார்களே…
“அம்மா கீதாவுக்கு இந்தப் பையனை ரொம்பப் பிடித்திருக்கிறது. இப்பவே அமெரிக்கா கனவுகளில் மிதக்கிறாள். கேவலம் பத்து பவுன் நகைக்காக அவள் சந்தோஷத்தை அழிப்பதா… எனக்கு ரெண்டு வாரத்திலே ஆபீஸ்லே லம்பா ஒரு அரியர்ஸ் பணம் வரப்போகிறது.. அந்த எக்ஸ்டரா பத்து பவுனை வாங்கி ஜமாய்ச்சுடலாம்….” என்று உற்சாகமாகப் பேசி சம்மதிக்க வைத்ததே நான்தானே….
ஆனால் எம்.டி. வெளிநாடு போயிருப்பதால், பணம் கிடைக்க மூன்று மாதம் ஆகும் என்று தள்ளிப்போனது தான் பெரிய சிக்கலாயிற்று..
“ராஜா,.. இந்த நெருக்கடி நேரத்திலே எனக்கு ஒரு யோஜனை… உனக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தானே ஆகிறது… உன் மனைவியின் நகைகள் எல்லாம் புதுக்கருக்கு அழியாமல் லாக்கரில் தானே இருக்கு.. அதிலிருந்து பத்துபவுன் நகையை எடுத்து கீதாவுக்குப் போட்டு கல்யாணத்தை ஒப்பேத்திடலாம்…. உனக்கு அந்த அரியர்ஸ் பணம் வந்ததும், கீதாவுக்கு புதுசா பண்ணிடலாம்… என்ன சொல்றே..” அம்மா பாவம் தயங்கித் தயங்கிதான் கேட்டார்..”
கூடவே ரமாவும் “ஏங்க… கீதா உங்களுக்குத் தங்கையின்னா எனக்கும் தங்கை தானே. அவசரத்துக்கு என்னுடையதை எடுத்துக் கொள்ளலாமே.. என்று வெகுளித்தனமாய் சொல்ல,” உடனே படு அவசரமாய் அந்த நகைகளை எடுத்துங்கற பேச்சே பேசப்படாது..” என்று கத்திப்பேசி நான்தானே அவர்கள் வாயை அடைத்தேன்.
வேறென்ன செய்ய…
இங்கே பாருப்பா… நான் சம்பிரதாயத்தை மீறமாட்டேன்.. சொன்னபடி நாப்பது பவுன் நகையும் போட்டால் கல்யாணம் நடக்கும்… இல்லையெனில் நாங்கள் கிளம்புகிறோம்… செய்வதறியாது, தலையை தொங்கப் போட்டுக்கொண்டு அறைக்கு வந்த ராஜாவைக் கண்டதும், அதுவரை எதோ ஒரு நம்பிக்கையில் வளைய வந்த மணப்பெண் கீதா அழ ஆரம்பிக்க, அம்மாவும் அழுதுக்கொண்டே ராஜாவை சாடத்தொடங்கினாள்….
“இந்த இடம் வேண்டாம். நம்மால் முடியாது என்று தலைப்பாடாய் எத்தனை சொன்னேன்… என்னவோ பாசமலர் சிவாஜி கணக்காக வசனம் பேசி, இப்படி பிரச்சனையில் கொண்டுவந்து விட்டாயே…. உன் பொண்டாட்டி நகையையும் தரமாட்டேன்னு பிடிவாதமா…. அப்படி என்னப்பா உன் மாமனார் ஸ்பெஷலா போட்டுட்டார்…..”
கீதாவின் நிலையைக் கண்டு ரமாவுக்கு துயரம் மேலிட்டது… குழந்தையின் கையில் சாக்லேட்டைக் கொடுத்துவிட்டு, வாயில் போடும்போது பிடுங்கிக் கொள்வதுபோல் அல்லவா இருக்கிறது….
என் நகை விஷயத்தில் இவர் “ஏன் இத்தனை பிடிவாதம் காட்டவேண்டும்.. எங்களுக்குக் கல்யாணமான மறுநாளே, ரமா, நகைகளையெல்லாம் வீட்டில் வைத்திருக்கக்கூடாது…. காலம் கெட்டுக்கிடக்கு… பேங்க் லாக்கரில் கொண்டுப்போய் வைத்து விடுகிறேனென்று என் நகைகளை வாங்கிக்கொண்டு போனதோடு சரி… அப்புறம் கண்ணிலேயே காட்டலியே…… ரமாவிற்கு கணவன் மேல் தாங்கமுடியாத அளவுக்கு கோபம் வர, பொறுமை இழந்து, “என் நகைகளை என்ன செய்தீர்கள்… தொலைத்து விட்டீர்களா…. விற்று விட்டீர்களா.. என் அப்பா எனக்கு ஆசையாய் போட்ட நகைகள்…” அழுதவாறே அறையை விட்டு வெளியே வந்தவள், வாசலில் அப்பாவும், அம்மாவும் ஆட்டோவிலிருந்து இறங்குவதைக் கண்டு ஓடினாள்…
பெண்ணைப் பார்த்தவர்களுக்குத் தூக்கிவாரிப்போட….. “ரமா, ஏனிப்படி இருக்கிறாய்…. என்னவாயிற்று”
“எல்லாம் உங்கள் மாப்பிள்ளையால்… கல்யாணமே நின்றுப்போகும் நிலை வந்துவிட்டது” என்று ஆரம்பித்து, ரமா விவரமாகச் சொன்னாள்..
மகள் சொன்னவுடன், “அப்படியா” என்றவர் விடு விடென்று மாடிப்படிகளில் ஏறி… மாப்பிள்ளை அறைக்குள் மகேஷ்… “என்னைக் கேட்காமல் யார் உன்னை இப்படியெல்லாம் செய்யச்சொன்னது” என்று அம்மாவிடம் கத்திக்கொண்டிருந்த சமயம். “மன்னிக்கணும், நான் கீதாவின் அண்ணா ராஜாவின் மாமனார்” என்று உள்ளே சென்றவர், தொடர்ந்து பேசலுற்றார்…
தான் சொன்னதற்கு பதிலேதும் சொல்லாமல் அப்பா ஏன் மாடிக்குப் போகிறார்… குழப்பத்துடன் ரமாவும் அப்பாவைத் தொடர்ந்து வந்து அறைக்கு வெளியே நின்றுக்கொண்டாள்…..
“இந்தக் கல்யாணத்தில் இப்படி ஒரு சிக்கல் வந்ததுக்கு, நானும் ஒரு வகையில் காரணம்… மூன்று மாதங்களுக்கு முன்பு என் பெண் கல்யாணத்தின் போது, எனக்கும் இதேபோல் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது…
என் மாப்பிள்ளையோ, அவரது பெற்றோர்களோ என் பெண்ணுக்காக நகை, சீர் என்று எதுவுமே கேட்கவில்லை. நானாகவே “என் பெண்ணுக்கு, நான் இருபத்தைந்து பவுன் நகை போடுவேன்” என்று கூறிவிட்டு, எதிர்பார்த்தப்படி பணம் கிடைக்காததால், எப்படியும் ஆறு மாதத்திற்குள் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில், என் மனைவி மகளிடம் கூட சொல்லாமல், எல்லா நகைகளையும் கவரிங்கில் வாங்கி என் பெண்ணுக்குப் போட்டுவிட்டேன்…
ஆனாலும் மனது ரொம்ப உறுத்தியது… ஒன்றுமே கேட்காத சம்மந்திகளிடம் போய் இதைச் சொல்ல என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை..
கல்யாணத்திற்கு முதல்நாள் என் மாப்பிள்ளை ராஜாவை நம்பிக்கையுடன் தனியே சந்தித்து விவரத்தை விளக்கினேன். நான் புதிதாக தங்கத்தில் மாற்று நகைகள் செய்துப்போடும் வரை, இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தேன்… அவரும் எனக்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும் நடந்துக்கொண்டார்…
“மாமா, நீங்கள் கவலைப்படாதீர்கள்.. உங்கள் பெண்னைத்தான் நான் விரும்புகிறேன்… இந்த நகை விஷயம் பற்றி பிரச்சனை இல்லை.. இருந்தாலும்… என் பெற்றோர், ரமா யாரிடமும் நான் சொல்லப் போவதில்லை. கல்யாணம் முடிந்து எங்கள் வீட்டுக்குப் போனதுமே, நான் பேங்க் லாக்கரில் வைப்பதாக ரமாவிடம் சமாளித்து, அவளிடமிருந்து நகைகளை வாங்கி உங்களிடமே கொண்டுவந்து கொடுத்து விடுகிறேன்…….
ஏனெனில், அடிக்கடி கவரிங் நகைகளை உபயோகித்தால் யாராவது கண்டுபிடித்து விட்டால்… வீண் பிரச்சனை எதுக்கு..” என்று சொல்லி அப்படியே செய்தார்.
அப்படிப்பட்ட என் அருமையான மாப்பிள்ளைக்கு, இந்தச் சமயம் நான் உதவி செய்தேயாக வேண்டும்… நான் நினைத்ததை விட சீக்கிரமே எனக்குப் பணவசதி கிடைத்ததால், என் பெண் இந்த கல்யாணத்தில் போட்டுக்கொள்ளட்டும் என்று ஒரிஜினல் நகைகளை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன்… நான் வந்து இறங்கியதும், என் பெண் வாசலிலேயே விவரங்களைக் கூறியதும், நேரே இங்கு வந்துவிட்டேன்… நீங்கள் தயவு செஞ்சு இதிலிருந்து தேவையான நகைகளை எடுத்துக்கொண்டு, கல்யாணத்தை நடத்தணும்…. இதோ பாருங்கள்” என்று தன் கையிலிருந்த பிரீப்கேஸைத் திறந்து காட்டினார்.
பெட்டி நிறைய பளபளன்னு நகைகள் ஜொலித்தன….. உடனேயே மாப்பிள்ளை மகேஷ் அவரைப்பார்த்து, “சார், தயவுசெய்து பெட்டியை மூடுங்கள்…..
என் அம்மா என்னிடம் “மகேஷ், இந்தக் கல்யாணத்தை நம் சம்பிரதாயப்படி நடத்தணும்” என்று கேட்டதும், நான் சம்பிரதாயம் என்றால் நலங்கு… ஊஞ்சல்… ஊர்வலம் இதெல்லாம்தான் இருக்கும்… எல்லாம் ஒரு ஜாலிதானே என்று “சரிம்மா, உன் இஷ்டப்படியே செய்” என்று சொன்னேன்… அது இப்படியாகும் என்று சத்தியமாய் எனக்குத் தெரியாது… என் அம்மாவின் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.” வருத்தத்துடன் சொன்னவன், அதேக் குரலில் அம்மாவிடம் சொன்னான்.. ‘அம்மா, கீதா தான் என் மனைவி என்று நான் எப்பவோ தீர்மானித்து விட்டேன்.. இதை நானே அவர்களிடம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்தச் சொல்லட்டும்மா…. இல்லை உன்னால் ஏற்பட்ட குழப்பத்தை நீயே சரி செய்கிறாயா..”
மகனை மேல பேச விடாமல் மாமி சொன்னாள்..” என்னை மன்னிச்சுடு.. நான் பண்ணினது தப்புத்தான்.. எனக்கு என் பிள்ளையின் சந்தோஷந்தான் முக்கியம்… இதோ இப்பவே நான் போய் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கல்யாணத்தை நடத்தச் சொல்றேன்…”
வெளியில் நின்று எல்லாவற்றையும் கேட்ட ரமாவுக்கு, அப்பா மேல் கோபமும், கணவன் மேல் பிரியமும் மரியாதையும் பொங்கின.. சே.. எத்தனை நல்லவரைப் போய்…
தனிமையில் அவரிடம் மன்னிப்பு கேக்கணும்.. இப்போ முதலில் கீதா கல்யாணம் நடக்கப்போறது…. இந்தச் சந்தோஷ சமாச்சாரத்தை கீதாவிடம் போய் சொல்லணும்…. ரமா தடதட வென்று மாடிப் படிகளில் இறங்கி ஓடினாள்….
– கதைப் படிக்கலாம் – 79
இதையும் படியுங்கள் : தன்னிலை தாழாமை!




