– பூ. கார்த்திகா

சுஜி அவசர அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளது அம்மா அவளுடைய பையை தயார் செய்துக்கொண்டே, எங்கேயாவது வெளியே போகணும்னா, சீக்கிரம் கிளம்பணும் என கூறிக்கொண்டு இருந்தாள்.
அவள் நான் வரேன் மா… என்று கூறிவிட்டு, பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள். பேருந்து வந்தது. பின்னால் இருந்து மூன்றாவது இருக்கையில் ஒரு பாட்டியின் பக்கத்தில் அமர்ந்தாள். அவளை கண்டதும் அந்தப் பாட்டி புன்னகை புரிந்தாள்.
பார்ப்பதற்கு வசதியாக வாழ்ந்தவர் போல இருந்தார். ஆனால் நைந்த உடையை அணிந்து இருந்தாள். கையில் இரு பெரிய பை, அது என்னவென்று தெரியவில்லை. ஆனால் எழுந்து நின்று செல்லும் போதெல்லாம், பாத்திரங்கள் உரசும் சத்தம்.
பாட்டி அவளிடம் ஒன்றுமே பேசவில்லை. அடிக்கடி பார்த்துப் புன்னகை செய்தாள். ஆனால் நடத்துனரிடம், பெரியார் நகர் வந்தால் சொல்லு என்று கேட்டுக்கொண்டே வந்தார். அவளும் அங்கேயே தான் இறங்க வேண்டியிருந்தது. பெரியார் நகர் நிறுத்தம் வந்தவுடன், அந்த பாட்டிக்கு இறங்க உதவி செய்தாள். அப்போதுதான் அவளிடம் பேசினாள்.
பாப்பா இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணு… என்று அவள் அழைத்தாள். ஆனால், எதிர்முனையில் பதில் இல்லை. பாட்டியே தொடர்ந்தாள். என் மகன் தான். இங்கு இறங்கச் சொன்னான். இறங்கியதும் ஃபோன் பண்ணச் சொன்னான்.
அவள் மீண்டும் முயற்சித்தாள். பதில் இல்லை. சுஜிக்கு அவசர வேலை இருந்ததால் கிளம்பிவிட்டாள். திரும்பும் போது அந்த இடத்தைப் பார்த்தால், அங்குப் பாட்டி இல்லை. அவள் எங்கே? போனாள், வீட்டற்க்கு போனாளா இல்லையா என தெரியவில்லை.
ஏனோ மனம் கணத்தது. அப்பொழுதுதான் அவளுக்கு நினைவு வந்தது. தனது பாட்டி முதியோர் இல்லத்தில் இருப்பது. நேராக முதியோர் இல்லம் சென்றாள். பாட்டியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச்
சென்றாள்.
– கதைப் படிக்கலாம் – 128
இதையும் படியுங்கள் : ஆறாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு



