இந்த ஆண்டு மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, முதலமைச்சர் எடப்பாடி தான் என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. கட்சியில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்ததான வாக்குவாதங்கள் எழுந்துவந்த நிலையில், வருகின்ற 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று, அண்மையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்து, அனைத்து சர்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஈரோடு அ.தி.மு.க. அமைச்சர் கே.சி. கருப்பணன், முதல்வர் வேட்பாளரை அறிவித்ததில் அ.தி.மு.க. கட்சியில் எந்த ஒரு சிக்கலும் இல்லை எனவும், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரையிலும், அவர் தான் முதலமைச்சர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் நேர்மையும், திறமையும் உள்ளவர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணி, அ.தி.மு.க. தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், தற்போது அமைச்சர் கருப்பணன் கூறிய கருத்தால், மீண்டும் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.




