தி.மு.க. எம்.எல்.ஏ., மா. சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்களும், மருத்துவ ஊழியர்களும், சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா வைரஸ்-ன் பாதிப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடிய நோய் தொற்றிற்கு பலரும் பலியாகி வருகின்றனர்.
தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
இந்நிலையில் மா. சுப்ரமணியத்தின் 34 வயது மகன் அன்பழகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த செய்தி தி.மு.க. கட்சியினர் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகன் மறைவிற்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




