சென்னை பெரம்பூரில் சார்ஜர் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிய 17 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா, சரஸ்வதி தம்பதியரின் இரண்டாவது மகன் சஞ்சய். இவருக்கு வயது 17. ப்ளஸ் டூ முடித்தப்பின்பு, வேலை தேடி சென்னை வந்த சஞ்சய், கொடுங்கையூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளான்.
இந்நிலையில், சார்ஜரில் போட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வரவே, சார்ஜரில் போட்டிருந்தவாரே போனில் பேசியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக செல்போனில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார் சஞ்சய். சஞ்சய் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனே மயங்கி கிடந்த சஞ்சையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அவரது உறவினர்கள் சஞ்சயின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல முயன்றனர். இதற்கிடையில் தனியார் மருத்துவமனையிலிருந்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சஞ்சயின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சார்ஜரில் போடப்பட்டிருந்த செல்போனை ஈரக் கையால் சஞ்சய் எடுத்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்திருக்கிறது. அதன்பின்பு சஞ்சயின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.