தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, தி.மு.க. ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கூறியிருப்பதாவது, நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. .
ஆனால், தனியார் கல்லூரிகளில் வசூலிக்ககூடிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். எனவே, இந்தக் கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் முழுமையையும் தி.மு.கழகம் ஏற்கும் என தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‟தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது! இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும்!” என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் மருத்துவ கல்விக் கட்டணத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ முன் வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




