சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் பயணமாக இன்று சென்னை வந்தார். அவர் சிறப்பு விமானம் மூலம் மதியம் 1.40-க்கு அவர் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். மேலும், வரவேற்பின்போது தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் உள்பட பா.ஜ.க.வினர் உடனிருந்தனர்.
பின்னர், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சென்ற அவருக்கு பா.ஜ.க.வினரும், அ.தி.மு.க.வினரும் வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர் திடீரென காரைவிட்டு கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்கள் மத்தியில் கை அசைத்தார்.
நலத்திட்டங்கள்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமித்ஷா மாலை 4.15 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.




