2ஜி விவகாரத்தில் ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்த நிலையில், அவருடன் விவாதம் நடத்த முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

தமிழக பட்ஜெட் தொகையைப் போல, 2ஜி விவகாரத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட அதற்கு சூடாக பதிலடி கொடுத்தார் அவ்வழக்கிலிருந்து விடுதலையான திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா. இதுதொடர்பாக கோட்டையில் முதல்வருடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
இதுதொடர்பாக அதிமுக அமைச்சர்கள் ஆ.ராசாவை விமர்சித்துப் பேசிவருகிறார்கள். ஸ்டாலினையும், ஆ.ராசாவையும் கடுமையாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தான் விவாதத்துக்கு தயார் என்றார். எனினும், முதல்வரும் 2 ஜி விவகாரத்தில் தொடர்ந்து திமுகவை குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து 2ஜி வழக்கு தீர்ப்பின் நகலை வெளியிட்ட ஆ.ராசா, முதல்வர் 2ஜி விவகாரம் குறித்து பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அத்துடன், இதுதொடர்பாக விவாதத்திற்கு அழைத்த நிலையில், முதல்வரிடமிருந்து பதில் வரவில்லை எனவும் கூறினார்.
திருவாரூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் இதுபற்றி பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆ.ராசா விவாதத்திற்கு கூப்பிட்டால் நான் போகனுமா என்ன? எந்த கட்சிக்கு அவர் தலைவர். சாதாரண ஆள் அவர், எங்கள் கிளை செயலாளர் அந்தஸ்து கூட அவருக்கு கிடையாது என்று கடுமையாக விமர்சித்தார் முதல்வர்.
திமுகவுக்குத்தான் ஆ.ராசா பெரிய ஆள். அவரிடம் பணம் நிறைய இருப்பதால் அவரை கட்சியில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது அவர்களுக்கு செலவுக்கு பணம் வேண்டுமல்லவா? என்றவர், ராசா கூப்பிட்டால் வேறு யாராவது விவாதத்திற்கு செல்வார்கள். நான் போக முடியாது என்றும் நிராகரித்தார். 2ஜி வழக்கில் அவகாசம் அளித்தும் சிபிஐ உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் ஆ.ராசா விடுதலையாகிவிட்டதாகவும், மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு அவர் இருக்கும் இடம் எதுவெனத் தெரியுமெனவும் முதல்வர் கூறினார்.




