நிழல் உலகதாதா என்றழைக்கப்படும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் மன்னை பாவா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் தேச இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதம் மற்றும் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசி கலவரத்தை உண்டாக்க முயற்சித்தல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாவா பக்ருதீன் என்ற மன்னை பாவா என்பவரும் தேச இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரித்த என்ஐஏ அதிகாரிகளுக்கு திடுக்கிடும் பல தகவல் கிடைத்தன. அதாவது, மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன், மன்னை பாவா இணையவழி தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
அவர்களுடன் சேர்ந்து தேச ஒற்றுமையை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில் வசிக்கும் மன்னை பாவாவின் வீட்டிற்குள் புகுந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாவா பக்ரூதினை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்த இளைஞரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




