
இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் தான் என்ன என்று வினவியுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தி.மு.க தலித்துக்கு எதிரான கட்சி என்று தெரிவித்துள்ளார்.
ப்ளூகிராஃப்ட் என்கிற பதிப்பகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டு அம்பேத்கர் அண்டு மோடி’ என்கிற பெயரில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில், நரேந்திர மோடி மற்றும் அம்பேத்கரிடம் ஆச்சரியமளிக்கும் வகையில் ஒற்றுமைகள் உள்ளன என்பதை இந்த புத்தகம் தெரிவித்துள்ளது. வெறும் கனவுகளை மட்டும் கண்டுகொண்டிருக்காமல், அதற்கான செயல்களை செய்தவர்கள் என்று பல்வேறு வகையில் இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளார்.
இதற்கு சமூகவலைதள பயன்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக இளையராஜாவின் கருத்தை விமர்சித்து பலரும் ட்வீட் செய்து வருவது சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அறிவாலயம் மற்றும் அதன் சுற்றத்துக்குப் பிடிக்காத கருத்து, குற்றமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது, அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.




