தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான நடவடிக்கையை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தரும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் பல குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக 2014 முதல் 2019 வரை, மொத்தமுள்ள இடங்களில் 70.31 சதவிகித இடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளன. 30 சதவிகித இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில் கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டும். ஆனால் தமிழக அரசு அந்தக் கட்டணத்தை செலுத்துவதில் காலம் தாழ்த்துவதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையை தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக செலுத்த வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.




