மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனம் ஆகியவை, கொரோனா ஊரடங்கை தொடர்ந்து செப்டம்பர் மாத விற்பனையில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட, ஆட்டோமொபைல் துறை தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது. இந்நிலையில் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் அதன் வாகன விற்பனை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளன.
அதன்படி, மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 442 வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 30 விழுக்காடு அதிகமாகும். குறிப்பாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 993 பயணியர் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 43 விழுக்காடு அதிகமாகும்.
ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், பலினோ, டிசயர் உள்ளிட்ட சிறிய வகை வாகனங்களே அதிகம் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடதக்கது. எர்டிகா, விதாரா பிரெசா உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்கள் 23 ஆயிரத்து 699 விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 விழுக்காடு அதிகமாகும்.
இதேபோன்று, டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாதத்தில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8116 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாத விற்பனையில் டொயோட்டா நிறுவனம் 46 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 2019 செப்டம்பரில் டொயோட்டா நிறுவனம் 10,203 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, முன்பதிவு சதவீதம் 14 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.