ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் 3.5 சதவீதம் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
கார்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள், மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் இச்சூழல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக பிஎம்டபுள்யூ நிறுவனம் தன்னுடைய BMW 2, 3, 5, 6, 7 சீரிஸ் ரக கார்கள் மற்றும் M 340i, X சீரிஸ், மினி கூப்பர் உள்ளிட்ட கார்களின் விலையை சற்று உயர்த்தியுள்ளது.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த புதிய விலைப் பட்டியல் அமலுக்கு வருகிறது. பிஎம்டபுள்யூ நிறுவனம் சென்னையில் உற்பத்திக் கூடம், புனேவில் உதிரி பாகங்களுக்கான கிடங்கு, குருகிராமில் பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 650 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.