வங்கித்துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், கேரளாவில் தனது முதல் மகளிர் வங்கி கிளையை ஹெச்டிஎப்சி வங்கி துவங்கியுள்ளது.

முன்னணி தனியார் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கி தனது முதல் மகளிர் கிளையை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செரூட்டி சாலையில் திறந்துள்ளது. இந்த வங்கிக் கிளையை கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் நேற்று திறந்துவைத்தார். புதிய வங்கிக் கிளையில் 4 பெண்கள் பணியாற்றுகின்றனர்.
இதுகுறித்து ஹெச்டிஎப்சி வங்கியின் தென்மண்டல தலைவர் சஞ்சீவ் கூறுகையில், “வங்கியின் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு உதாரணமாக அனைத்து மகளிர் வங்கி கிளை துவங்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2022 நிலவரப்படி, ஹெச்டிஎப்சி வங்கியில் 21.7% பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2025ம் ஆண்டுக்குள் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25% ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.




