“சூரரைப்போற்று” படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், அதுதொடர்பாக சூர்யா விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்வதில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தை சூர்யா தான் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் வெற்றியை சூர்யா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த இப்படம் ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து வெளியாவதில் தாமதமாகி வருகிறது.
படத்தின் கதையின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் மட்டுமே இப்படத்தை வெளியிட சூர்யா உறுதியாக இருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சூர்யா தனது படத்தை OTT தளத்திற்கு விற்றுள்ளார்.
சூர்யாவின் இந்த முடிவு தமிழ் திரையுலகினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி “சூரரைப் போற்று” அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா, பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை” என குறிப்பிட்டுள்ளர். “என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்” என விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தத் திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு, ‘ஐந்து கோடி ரூபாய்’ பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.