தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் மன்சூர் அலிகான். வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நாம் தமிழர் கட்சியில் இணைந்த மன்சூர் அலிகான், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல்லில் போட்டியிட்டு படுதோல்வியை தழுவினார்.
நாம் தமிழர் கட்சியில் ஏற்பட்ட கருந்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். விளம்பர பிரியர் என பலராலும் விமர்சிக்கப்படும் மன்சூர் அலிகான், சமீபத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வம்பில் சிக்கினார்.
அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற மன்சூர் அலிகான், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.