பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் மும்பையில் பஞ்சாப் மாநில நடைமுறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
இந்தி சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் ரன்பீர் கபூர். அயான் முகர்ஜி இயக்கத்தில் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்த போது, அப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆலியா பட்டுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளிடைவில் இது காதலாக மாறியது.
முன்னதாக தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா, அனுஷ்கா ஷர்மா, கத்ரீன கைஃப் என பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டனர். அந்த வரிசையில் விரைவில் ஆலியா பட்டும் திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான பணிகள் இந்தாண்டு முதலே நடைபெற்று வந்தது. எதிர்பார்த்தது போலவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரன்பீர் மற்றும் ஆலியாவின் திருமண தேதி விபரங்கள் வெளியாகின. அதன்படி கடந்த 14-ம் தேதி மும்பையிலுள்ள வாஸ்து இல்லத்தில் பஞ்சாப் மாநில முறைப்படி ரன்பீர் மற்றும் ஆலியாவின் திருமணம் நடைபெற்றது.
இதில் இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள்,உறவினர்கள் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து தனது திருமணப் புகைப்படங்களை ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தற்போது இவர்களுக்கு திரைப்பட ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.