கொரானோ லாக்டவுன் காரணமாக 150 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. மற்ற தொழில்கள் ஓரளவிற்கு ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்க தியேட்டர்கள் மட்டும் இன்னும் திறந்த பாடில்லை.
அதனால் சில சிறிய பட்ஜெட் படங்கள் ஓ. டி. டி. தளத்தில் வெளிவந்தது அப்படி வெளிவந்த படங்களில் பொன்மகள் வந்தாள், பென்குயின் போன்ற படங்கள் குறிப்பிட தக்கவை ஆகும்.
தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் அல்லது பெரிய படங்கள் எதுவும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகவில்லை. அந்தக் குறையை தற்போது சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் போக்கியிருக்கிறது.
அக்டோபர் மாதம் 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்த படத்தின் நாயகன் சூர்யா அறிவித்துள்ளார். தியேட்டர்கள் திறப்பு எப்போது என்று தெரியாத சூழ்நிலையிலேயே, இந்தப் படத்தை சில மாதங்களுக்கு முன்பே சென்சார் செய்தார்கள். அப்போதே இந்தப் படம் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவற்றைத் தயாரிப்பு தரப்பில் மறுத்தார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஓடிடி வெளியீட்டிற்கான அறிவிப்பு வெளிவந்தது.
தியேட்டர்கள் திறக்கப்பட்டால் ‘சூரரைப் போற்று’ படமும், விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படமும் தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரவழைக்கும் என தியேட்டர்காரர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்களது ஆசையில் ‘சூரரைப் போற்று’ குழுவினல் தற்போது மண்ணை அள்ளி போட்டு விட்டனர் என தியேட்டர் உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
அடுத்த சில மாதங்களில் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படியே அடுத்த மாதம் திறக்கப்பட்டால் கூட அரசு பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் எனவே பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிடாமல் வைத்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே தான் ‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
அது போலவே 150 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம் என சொல்லப்படும் ‘மாஸ்டர்’ படமும் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகுமா என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது.ஆனால் தியேட்டர் திறக்க எவ்வளவு நாள் ஆனாலும் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என விஜய் திட்ட வட்ட மாக அறிவித்து விட்டார். அதனால் தளபதி ரசிகர்கள் தியேட்டர் திறக்கும் வரை பொறுத்து இருக்க வேண்டும்.