கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் முதல் ஆளுநர் வரை பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக திரையுலகினர் பலரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதி கொடுத்து வருகின்றனர்.
முதலில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கினர். அதன் பின்னர் தல அஜித் ஆன்லைன் மூலமாக ரூ.25 லட்சம் வழங்கினார். நடிகர்கள் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் ஆகியோர் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர். இயக்குநர்கள் வெற்றிமாறன், ஷங்கர் ஆகியோரும் தலா 50 லட்சம் நிதி வழங்கினர்.
சற்று முன் தலைமைச் செயலகம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் ” எனவும் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார்.