– எஸ். ஸ்ரீதுரை

“உமா, இங்க வந்துப் பாரேன்….!” என்ற லாவண்யனின் உரத்தக் குரல் கேட்டு ஓடிவந்து பார்த்தவள், “வேற வேலையே இல்லை உங்களுக்கு….!”, என்று அலுத்துக்கொண்டு சமயலறைக்குத் திரும்பினாள்.
“வேஸ்ட் ஃபெல்லோ….!” என்று அவளை மனசுக்குள் சபித்துவிட்டு, பாத்ரூம் மூலையை மேலும் அவதானிக்கத் தொடங்கினான் லாவண்யன்.
அந்தக்காலத்தில் இவனுக்கு உடம்பு வளர்ச்சி போதவில்லை என்று, இவன் அம்மா குழைத்துக் குழைத்துக் கொடுத்த பூஸ்ட்டு, காம்பிளான் போன்றதொரு நிறத்தில், பாத்ரூமின் பத்துவாட்ஸ் எல்.இ.டி விளக்கின் வெளிச்சத்தில் சற்றே மினுக்கியபடி, அரையடி ஸ்கேல் நீளத்திற்கு, பாத்ரூம் தண்ணீர் வெளியேறும் சல்லடைக்குக் கீழ்ப்புறத்திலிருந்து பிரசன்னமாகி நெளிந்துக்கொண்டிருந்த ஜந்து, லாவண்யனின் கவனத்தை ரொம்பவே கவர்ந்துக்கொண்டிருந்தது.
பாத்ரூம் சுவற்றின் மூலையில் ஏறுவதும், பின்பு அது சரிப்படாதது போல தொப்பென்று தரையில் விழுந்து குழாயடி பக்கெட்டின் கீழ்ப்புறத்தை நோக்கி முன்னேறுவதும், அதுவும் வேண்டாமென்று அபவுட் டர்ன் அடித்து ஜல்லடைக்கே திரும்புவதும், உடனே மனசு மாறி பாத்ரூம் கதவுவரை போய்வருவதுமாக அங்குமிங்கும் நெளிந்து அல்லாடிக்கொண்டிருந்தது அந்தப் புழு அல்லது பூச்சி.
சாப்பாட்டுக்கு வழிதேடுகிறதா…. அப்படி அது சாப்பிடும்படி இந்த நாலுக்கு நாலடி பாத்ரூமில் என்னதான் ஆகாரம் கிடைக்கக்கூடும் என்றெல்லாம் யோசனை புரண்டது, லாவண்யனுக்கு.
பாதிக்குளியலை நிறுத்திவிட்டு, மேற்கொண்டு குளிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்தான். சளசளவென்று எடுத்து ஊற்றிக்கொள்ளும் தண்ணீரில் அது அடித்துக் கொண்டு போய்விட்டால், அப்புறம் அதன் உணவுத்தேடல் என்னாகுமோ என்ற யோசனை லாவண்யனை ரொம்பவே பாதித்தது.
“இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவீங்க. ஆபீஸுக்கு நேரமாச்சில்ல….?” என்ற உமாவின் பிளிறலில் மயக்கம் தெளிந்து மீண்டு, மெதுவாகத் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொள்ளத் தொடங்கினான். அது ஒதுங்கியிருந்த சுவற்றுக்கு எதிர்ப்புறச் சுவற்றுக்குப் பக்கமாக ஒதுங்கிக் கொண்டு ஊற்றிக்கொண்டால், வழியும் தண்ணீர் அதன் மீது படாது என்று நம்பினான். சடாரென்று அது தன் பயணத்திசையை மாற்றிக்கொண்டு பாத்ரூமின் மையம் நோக்கி நெளிந்துக்கொண்டிருப்பதை இவன் கவனிப்பதற்குள், சட்டென்று ஒரு பலமான தண்ணீர்த் தெறிப்பில் அது அடித்துக்கொண்டு போய் ஜல்லடைக்கு அந்தப்புறம் போய் மறைந்தது.
“கடவுளே, அது செத்துப்போயிருக்கக்கூடாது….” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டே பாத்ரூமிலிருந்து வெளியேறிய லாவண்யன், “டிபனைப் போடு உமா….” என்று டைனிங் டேபிள் நாற்காலியை நிறைத்தான்.
முன்னிரவில் வீடு திரும்பி முகம் கழுவும் சம்பிரதாயத்தின் போது, மீண்டும் தென்பட்ட அந்தப் புழுவை உமாவிடம் காண்பித்ததில் அதன் பேர் செவியான் என்று சொன்னாள்.
“அந்தப் புழு துறுதுறுப்பா அழகா இருக்குதில்லே உமா….?” என்று கேட்டதற்கு வந்த எதிர்வினை, அவன்மீது தாக்குதல் தொடுத்து அவனைக் கொஞ்ச நேரம் மௌனியாக்கியது.
“ஏங்க, உங்களுக்குக் கொஞ்சமாவது ‘இது’ இருக்கா? அந்த சாக்கடைப்புழு உங்களுக்குப் பார்க்க அழகாயிருக்கா. நல்லா வருதுங்க என் வாயில. அதைப் பார்த்தாலே எங்களுக்கெல்லாம் அருவறுப்பு. உங்களுக்கு அது அழகு…. துறுதுறுப்பு. ஏன், எடுத்துச் சட்டை பாக்கெட்ல விட்டுக்கிட்டு ஆபீஸுக்குக் கூட்டிப்போங்களேன். அது மெதுவா வீட்டுக்குள்ளே வந்துதுன்னு வெச்சிக்குங்க, கீழே படுத்துக்கிட்டிருக்கிற குழந்தைங்களோட காதுல புகுந்து ஒரே இம்சை கொடுக்குமாம். குழந்தைங்க அழுது அழுதே ஒருவழியாயிடுமாம். அதுனாலத்தான் அந்தப் புழுவுக்கு செவியான்னு பெயர் வந்துதாம்…. எங்கம்மா சொல்லியிருக்காங்க. எங்க வீட்லல்லாம் இதைப் பார்த்தாலே எரிச்சுடுவாங்க. எவ்வளவு அடிச்சாலும் அதுக்கு உசிர் போகாதாம்…. தெரியுமா உங்களுக்கு….?”
“நம்ம குழந்தையைத் தரையில படுக்க விடறதில்லையே, தொட்டில்லதானே விடறோம் உமா?” என்ற பதிலுக்கும் பதிலடி கிடைத்தது.
“நீங்க வேணா அதை எடுத்துத் தொட்டில்ல விடுங்களேன்…. செஞ்சாலும் செய்வீங்க”….!”
தொட்டில் குழந்தை சிணுங்கி அந்தப் பேச்சுக்கு அத்துடன் சுபம் கார்டு போட்டது. இரவுச் சாப்பாட்டுக்கு வெங்காயம் அரியத் தொடங்கினான் லாவண்யன்.
அடுத்தடுத்த நாட்களில் பலமுறை அந்தப் புழு பாத்ரூமில் லாவண்யனுக்கு தரிசனம் அளிக்கவே செய்தது. நடுநடுவில் சிலநாட்கள் லீவு எடுத்துக்கொள்ளவும் செய்தது.
திடீரென்று ஒருநாள் ஜோடியாகப் பிரவேசம் செய்தது. புருஷன் பெண்டாட்டியா… அண்ணன் தம்பியா… இல்லை அக்காள் தங்கையா…. யார் கண்டார்கள்…. தாத்தா பேரனாகக் கூட இருக்கும். இன்னொருநாள் கூட இரண்டு குட்டிப்புழுக்கள்…. அட சம்சாரி….
எது எப்படியோ. உமா பாத்ரூமுக்கு வரும் வேளைகளில் அவள் கண்ணில் பட்டுவிட்டால் நிஜமாகவே அவள் அதுகளை ஏதாவது செய்துவிடுவாள் என்ற அச்சம் மட்டும் இருக்கவே செய்தது. அதுவும், அவை அவன் கண்களுக்குப் படாத நாட்களில், உமாதான் இவன் ஆபீஸ் போனபிறகு அதுகளை எரித்துப்போட்டிருப்பாளோ என்றெல்லாம் சந்தேகம் வரும்.
இதையெலாம் யார் உமாவிடம் கேட்பது.
ஏற்கெனவே இவன் தெருநாய்களுக்கு பிஸ்கட், பொறை போடுவதற்கும், நிறைசூலிப் பூனை ஒன்றுக்கு கிண்ணம்நிறையப் பால் வைப்பதற்கும் தினந்தோறும் ஒரு பிரளயமே நடக்கிறது.
வார இறுதி விடுமுறை.
எண்ணெய்க் குளியல், மதியச் சாப்பாடு, சாயந்திரக் கோயில் விஜயம், மாதம் ஒருமுறை சினிமா என்பது வார இறுதி நாட்களின் மாறாத விதி.
விதியை ஏற்படுத்தியது உமாதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
காலையில் தலைக்கு எண்ணெய் வைத்துக்கொண்டிருந்த போது, கூடிய சீக்கிரம் வீட்டைக் காலி பண்ணித் தரச்சொல்லி ஹவுஸ் ஓனர் ஃபோனில் சொல்லியதையே அசைபோட்டபடி, பாத்ரூமுக்குள் நுழைந்து ஹீட்டரை நிறுத்தி வெந்நீரை பக்கெட்டில் நிரப்பினான். இன்று முதலே புதுவீடு தேட வேண்டியதுதான் என்ற நினைப்புடன் குளிக்கத் தயாரானான்.
பக்கத்தில் சீயக்காய்ப் பொடியும், ஷாம்புவும் தயாராக வைத்துக்கொண்டு முதல் மக் தண்ணீரை எடுக்கும்போதுதான் சட்டென்று கண்ணில் பட்டது.
பெரிய செவியான்கள் இரண்டுடன், புதுசாகக் குட்டிகள் இரண்டும் மெதுவாக அங்கும் இங்கும் ஊர்ந்துக்கொண்டிருந்தக் காட்சியில் லயித்தவனுக்கு, திடீரென்றுதான் அது உறைத்தது.
“நான் பாட்டுக்குக் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை ஊற்றிக்கொண்டு குளித்து அது இதுகள் மேல் பட்டு, சூடு தாங்காமல் செத்துப்போய்விடாதோ….?”
செவியான்கள் திரும்பிப் போகட்டுமென்று காத்திருந்தான். ம்ஹூம்…. நகர்வதாகத் தெரியவில்லை. அந்தப் பக்கமாகவே திரிந்துக் கொண்டிருக்கின்றதுகள்.
“இட்லி ரெடிங்க…. சீக்கிரம் வந்து குழந்தையை ஆட்டினீங்கன்னா சட்டினி பண்ணுவேன்….”
உமாவின் குரல்கேட்டுச் சட்டென்று முடிவெடுத்தான். வெந்நீர் நிரம்பிய பக்கெட்டைத் தள்ளிவைத்துவிட்டுக் குளிர்ந்த குழாய்த் தண்ணீரிலேயே குளியலை முடித்து வெளியே வந்தான் தான். கொஞ்ச நேரத்தில், ஏதோ காரியமாய் பாத்ரூம் பக்கம் வந்த உமா, சூடு தணியாத பக்கெட் தண்ணீரைப் பார்த்துவிட்டு, இவன் சொன்ன காரணம் கேட்டு ஓங்காரமாய்க் கத்தத் தொடங்கினாள்.
“எக்கச்சக்க கரெண்டு பில் கட்டுறதுல குறைச்சலில்லை. மகாராஜா ஹீட்டர் தண்ணியில குளிக்க மாட்டாராக்கும். எல்லாம் என் நேரம். பைத்தியதைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறேன். புழுபூச்சிக்குச் சுடும்னு பச்சத்தண்ணியில எண்ணெய் வெச்சுக் குளிச்சா, இந்த மார்கழிக் குளிருக்கு ஜுரம் தண்ணி வராது…. எல்லாம் என் தலைவிதி….”
உமா சொன்னது எச்சரிக்கையோ சாபமோ…. அன்று சாயந்திரமே லாவண்யனுக்குக் கடுமையான ஜுரம். நூற்றியோரு டிகிரி. கையில் குழந்தையுடன் இவனைத் திட்டியபடியே டாக்டர் வீட்டுக்கு உடன் வந்தாள். இரவு கஞ்சி வைத்துக்கொடுக்கும் போதும் லட்சார்ச்சனைதான்.
தை மாதம் பொங்கல் முடிந்து நாலைந்து நாட்களில் வீட்டைக் காலி செய்துக்கொண்டு, பக்கத்துத் தெருவில் பார்த்திருக்கும் புதிய வீட்டுக்குப் போக வேண்டிய நாள் நெருக்கத்தில்.
ஆபீஸில் லீவு எடுத்துக்கொண்டு சாமான்களை வகைபிரித்துக் கட்டிவைப்பதும், அவ்வப்போது அழும் குழந்தையை இருவரில் ஒருவர் சமாதானம் செய்தபடி ஓட்டலில் இருந்து வாங்கிய டிபனையும், சாப்பாட்டையும் அள்ளி விழுங்குவதுமாக ஓரிரண்டு நாட்கள் டாடா காண்பித்துப் போயின.
அந்த நாளும் வந்தது.
மினிலாரியில் எல்லாச் சாமான்களையும் ஏற்றி அனுப்பியாகிவிட்டது.
“சாவியை ஒப்படைச்சுட்டு சீக்கிரம் வாங்க” என்ற கட்டளையுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பக்கத்துத்தெரு புதிய வீட்டிற்கு நடையைக் கட்டினாள் உமா.
ஐந்தே நிமிடக் காத்திருப்பு.
“என்னப்பா லாவண்யன், லேட் பண்ணிட்டேனா….?” என்றபடி ஸ்கூட்டியில் வந்திறங்கிய ஹவுஸ் ஓனர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை “அப்படியெல்லாம் இல்லே ஸார்….” என்றபடி பாண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டுச் சாவிக்கொத்தை நீட்டியவன், “ஸாரி ஸார், ஒரே நிமிஷம்….” என்றபடி, சட்டென்று வீட்டினுள் நுழைந்து, பாத்ரூமை நெருங்கி அதன் கதவைத் திறந்து விளக்கைப் போட்டான்.
அதே பூஸ்ட், காம்பிளான் நிறத்தில் காட்சியளித்த செவியான் குடும்பத்திடம் “ஹாய் செல்லம்ஸ், நான் போய்ட்டு வர்றேன்பா. நீங்கல்லாம் ஜாலியா இருங்க….” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன்…
வீட்டு வாசலில் காத்திருந்த ஓனரிடம், “ஷாம்பூ பாட்டில் ஒண்ணு விட்டுப்போச்சுன்னு தோணிச்சு ஸார். அதுதான் பார்த்துட்டு வந்தேன்…!” என்று சொல்லிச் சமாளித்தபடி, சாவிய ஒப்படைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
– கதைப் படிக்கலாம் – 86
இதையும் படியுங்கள் : பொன்செல்வி




