– பா. அசோக்குமார்

வழக்கம்போல் முழித்தவுடன் மொபைலை எடுத்து வாட்ஸப்பில் உலவத் தொடங்கினான் பாண்டி. வாட்ஸப் போரடிக்கவே, முகநூலில் முகம் பதித்து புதையத் தொடங்கினான். “நண்பனாக இணை” என்று வந்திருந்த அறிவிப்பு செய்தியில், “தாமு” என்ற பெயருடன் வந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் “உறுதி” பொத்தானைக் ‘க்ளிக்’ செய்தான் பாண்டி.
பின்னர், அவனது பக்கத்தினுள் நுழைந்து அவனது பதிவுகள், புகைப்படங்கள் என நோட்டமிட்டுக் கொண்டே இருந்தவன், மெசன்ஜரில் நுழைந்து “வணக்கம் நண்பா” என்று அனுப்பினான் பாண்டி. இனம்புரியாத இன்ப உணர்வு மனதினுள் ஜில்லிடத் தொடங்கியது.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவனுடன் படித்தவன். கூடப் படித்தவன் என்பது மட்டுமே அதற்கு காரணமாக இருக்க இயலாதுதானே… ஆறாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை அப்பள்ளியில் வேற வேற பிரிவுகளில்தான் இருவரும் படித்து வந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள் மட்டுமே. பொதுவாக பத்தாம் வகுப்பில் தான் இரு பிரிவு மாணவர்களையும் ஒன்றாக இணைத்து, பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு செய்து வகுப்பை பிரிப்பது வழக்கம். ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது எழுபது, எண்பது மாணவர்கள் என படித்து வந்தனர்.
அந்தப் பகுதியிலேயே பிரபலமான பள்ளி என்பதாலும், பிற பகுதிகளில் உயர்நிலைப் பள்ளிகள் வேறு இல்லாததாலும் பல ஊர்களிலிருந்து மாணவ மாணவியர்கள் பேருந்துகளிலும் மிதிவண்டிகளிலும் பள்ளிக்கு வருவது உண்டு. அப்பொழுதெல்லாம் தேர்ச்சி பெறாவிட்டால், அதே வகுப்பில் தங்கும் சோகக் காட்சி அரங்கேறி வேதனையை உண்டாக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அத்தகைய துர்சம்பவங்களால் தான், இவர்கள் எட்டாம் வகுப்பு நுழையும் வருடத்தில் “ஆ” பிரிவில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை “அ” பிரிவை விடக் குறைவாக இருந்தக் காரணத்தால் பத்து, பனிரெண்டு மாணவர்களை மட்டும் பிரிவு மாற்றினர். அவ்வாறு “அ” பிரிவிலிருந்து “ஆ” பிரிவிற்கு மாறியவனே பாண்டி.
“அவ்வரிய நிகழ்வு மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் தாமு உடனான நட்பு கிடைக்காமலே போய் இருக்குமோ” என்று சிந்தித்தவனாக, அன்றாட நிகழ்வுகளில் மூழ்கத் தொடங்கினான். என்னத்தான் பிறபணிகளில் அடைமழையாய் மூழ்கினாலும், பசுமை நினைவுகள் மனக்கண்முன் வானவில்லாய் விரிவது இயல்பு தானே…
அரசு நிதியுதவி பள்ளியான அப்பள்ளியில், அன்றைய காலகட்டத்தில் விளையாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். கபடி, பூப்பந்தாட்டம் மற்றும் வளைபந்து ஆகிய மூன்று விளையாட்டுகளுக்கும் மாணவர்களை மாநில அளவிலான போட்டிகளுக்குத் தயார் செய்து விளையாட அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. எப்படியோ பூப்பந்தாட்டத்திற்கான இளையோர் அணியில் பாண்டியும் தாமும் இடம்பிடித்தனர். அதற்கான பயிற்சிக் காலம் அவர்களின் நட்பை பலப்படுத்தும் காலமாக அமைந்துவிட்டது.
படிப்பில் இருவருக்குமிடையே இருந்த ஆரோக்கியமான போட்டியும், நட்பை உறுதிபடுத்தும் உந்துசக்தியாகவே இருந்தது. சனி, ஞாயிறுகளில் கோலிக்குண்டு, கிட்டிப்புல், கீந்துக்குச்சி, குழிபந்து, பச்சக்குதிரை என ஒவ்வொரு பருவத்திற்குத் தகுந்தாற்போல் ஒன்றாக விளையாட ஆரம்பித்து, வளர்ந்த பின்நாட்களில் கிரிக்கெட், கேரம், சதுரங்கம், வாலிபால் விளையாட்டு வரை நீண்டதை நினைத்து பரவசமடைந்தான் பாண்டி. பாண்டியைவிட தாமுவே விளையாட்டில் படுசுட்டி.
இருவருமே ஒரே ஊரில் இருந்தப்போதிலும், சாலையைத் தாண்டி இரண்டு தெருக்கள் தான் தள்ளியிருந்த போதிலும், அதுவரை இருவருக்குமே அறிமுகம் இல்லாமல் இருந்தது ஆச்சரியமானதே. காலையில் பள்ளிக்கு ஒன்றாக நடந்துச் செல்கிறார்களோ இல்லையோ… மாலையில் இருவரும் ஒன்றாக வீடு திரும்பத் தொடங்கினர்.
சாலையின் இடது ஓரத்தில் இருந்த காளியம்மன் கோவில் வரை ஒன்றாக வந்து, தாமு மேற்குத் தெருவில் பிரிந்து தனது வீட்டிற்குச் செல்வான். பாண்டி தொடர்ந்து சிறிது தூரம் நடந்து தனது வீட்டை அடைவான். இருவருமே தத்தம் வீடுகளில் பள்ளிச் சீருடைகளைக் களைந்தப் பின்னர் மாலைக்கடன் கழிக்க ஆற்றுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். சற்றே முன்பின் சென்றாலும் ஒருவருக்கொருவர் காத்திருக்கப் பழகி கொண்டனர். ஆற்றின் கரையெல்லாம் இவர்களின் நட்புப்பாலம் நீண்டு வளர்ந்தது.
இப்படியாக பழைய நினைவுகளில் மூழ்கியபடியே, அன்றைய நாள் முழுவதும் மெசன்ஜரில் தாமுவின் பதிலுக்காக அவ்வப்போது உள்நுழைவதும் வெளியேறுவதுமாகவே இருந்தான் பாண்டி. முகநூலில் தாமுவின் குடும்பப் புகைப்படத்தைப் பார்த்தவுடன், இனம்புரியாத புன்சிரிப்பு ஏனோ உதடுகளில் தவழத் தொடங்கியது.
பத்தாம் வகுப்பை அடைந்தப் போது அரும்பு மீசை முளைக்கத் தொடங்க, இளமை ஊஞ்சலாடத் தொடங்கியது. இருபாலர்கள் படிக்கும் பள்ளி என்பதால், கட்டுப்பாடுகளோ ஏராளம். எதை ஒன்றை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த, அதுதானே வெடித்து முளைக்கும். அது தானே உலக வழக்கமும் கூட.
அவர்களது வகுப்பில் படித்த இருபத்து நான்கு மாணவிகளில், நான்கைந்து மாணவிகள் மட்டுமே மிக அழகாக இருந்தனர். அதிலுள்ள துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதில் ஒருவர் கூட உள்ளூர் இல்லை என்பதே. ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த பெண்ணின் பெயரைக் கூறிக்கொண்டு, “டேய், இது யேன் ஆளு” என்றுக் கூறி, தங்களுக்குள் வாதம் செய்வது உண்டு. “டேய்… அது என்ன தான் பாக்குது… பேசாம விலகிப் போய்டு” என்ற சண்டைகளும் வருவது உண்டு. பொதுவாக மாணவிகள் மாணவர்களிடம் அதிகம் பேசுவதே கிடையாது. அதிலும் கடமலைக்குண்டிலிருந்து வரும் லதாதேவி மீது எல்லோருக்கும் ஒரு கண்.
தேனியிலிருந்து மயிலாடும்பாறைக்கு வரும் டவுன்பஸ்ஸில் தான் பஸ் பாஸில் எல்லோரும் வருவார்கள். பொதுவாக ஊருக்குள்ளேயே திரும்பும் பஸ், காலையில் மட்டும் பள்ளிக்குச் சற்று முன்னதாக உள்ள காவல் நிலையம் அருகில் வந்து மாணவர்களை இறக்கிவிட்டுத் திரும்பும். அந்தப் பஸ் வரும் நேரத்தில் அங்கேச் சென்று சேர வேண்டும் என ஓட்டமும் நடையுமாக ஓடுவர் மாணவர்கள். அங்கேயிருந்து பள்ளி செல்லும்வரை தங்களது காதல் தேவதைகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் அல்லவா… மாலையில் பேருந்து ஏற பஸ் ஸ்டாப்பிற்கு கிட்டத்தட்ட பள்ளியிலிருந்து அரை கி.மீ.க்கு மேல் நடந்து வர வேண்டும். சாலையில் மாணவர்கள் ஒருபுறமும் மாணவிகள் மறுபுறமும் நடந்துச் செல்வதே எழுதப்படாத விதி. பாண்டியும், தாமுவும் நாளும் நடை பயணத்தினூடே நட்பைப் பரிமாற்றிக் கொண்டனர்.
லதாதேவி மீது தாமுக்கு இனம்புரியாத ஈர்ப்பு உண்டாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் லதாதேவியின் சாலைப் பாதுகாவலர்களாக மாறத் தொடங்கிவிட்டனர் இருவருமே. ஒருமுறை தாமு தனது நண்பர்களிடம், ” என் லதா, பாக்க அப்படியே நம்ம குஷ்பூ மாதிரி இல்லடா” என்று கூறினான். உடனே பாரதி என்பவன், “அப்படியாடா, எனக்கு ஒன்னும் அப்படித் தெரியலடா” என்றுச் சொன்னவுடன், தாமுக்கு கோபம் வந்துவிட்டது. “எட்டுப்பட்டி ராசா, படம் பாத்தியாடா நீ… அதுல…. பஞ்சுமிட்டாய் சீல கட்டிப் பாட்டு பாத்திருக்கீங்களாடா” என்று எல்லோரையும் பார்த்துக் கேட்டான். ஒருவருக்கொருவர் பேந்த பேந்த முழித்துக்கொண்டு, “ம்ம்ம். பாத்திருக்கோம்… பாத்திருக்கோம்… அப்படியென்ன ஸ்பெஷல்டா அதுல” என்றான் சக்கணன். “அதுல… ஒரு சீன்ல, நெப்போலியனை பாக்க விடாம ஊர்வசி, குஷ்பூ முகத்த மறைப்பா? தெரியுமில” என்று சொல்லி சிறிது நிறுத்தினான். எல்லோருடைய கண்ணிலும் அந்தக் காட்சி வந்துப்போனது. “அப்ப, குஷ்பூ காட்டுவ பாரு ஒரு எக்ஸ்ப்ரஷன், ப்பா…. என்னாமா இருக்கும் தெரியுமா?” என்று தனது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசமாக ஜொலிக்க கூறினான் தாமு.
“பைத்தியம் முத்திப் போச்சுடா” என்று பாரதி சொல்லி சிரிக்க, தாமு முறைக்க ஆரம்பித்தான். “அவன ஏன்டா முறைக்கிற.. நம்ம லதா என்ன அவ்வளவு குண்டாவா இருக்கு?” என்று சக்கணன் கடுப்பேத்த, நாகராஜ் அவன் பங்குக்கு, “சரி.. சரி.. விடுங்க… லதாவ சின்ன குஷ்பூனு சொல்லிக்கலாமா?” என்றான். உடனே, பாண்டி, “கரெக்ட்டுடா… சின்ன குஷ்பு தான். ‘தாலாட்டு’ பட ஹீரோயின் சிவரஞ்சனியே தான் நம்ம லதா” என்று சொல்ல, எல்லோரும் “ஆமாண்டா.. ஆமாம்” என்று கத்த… தாமு காண்டானான். “யேன் ஆள நீ எப்படி இப்படி ரசிக்கலாம்டா?” என்று பாண்டியை பார்த்துக் கத்திவிட்டு, அந்த இடம் விட்டு நகர்ந்தான்.
அதன்பின்னர் தாமுவின் நடவடிக்கைகள் விசித்திரமாக மாறத் தொடங்கின. காதல் கண்டதையும் செய்யச் சொல்லும் என்பது தாமுவின் விஷயத்தில் நிரூபணமானது. தனது ப்ளாஸ்டிக் அளவுகோலில் காம்பஸால் “லதா” எனப் பொறித்து வைத்தான். தனது அழிப்பான், பென்சில், புத்தகம் மற்றும் நோட்டுகளின் ஓரத்திலெல்லாம் “லதா”, “லதா” என்று எழுத ஆரம்பித்தான்.
யாராவது ஏனென்று கேட்டால் “எனது பெயரின் சுருக்கம்டா” என்பான். அப்பொழுதெல்லாம் அடுத்தவர் திருடக் கூடாது என்பதற்காக, ஆங்கில இன்ஷியலை எழுதுவது தான் வழக்கம். அதுவரை “எல்.டி” என்று எழுதியவன் இப்பொழுது “லதா” என்று எழுத ஆரம்பித்தான். “ல.தா” என்று எழுதாமல் இடையில் புள்ளியே தெரியாதது போல் புள்ளி வைத்துக் கொள்வான். அவனது அப்பாவின் பெயர் “லட்சுமணன்”. அது அவனுக்கு மிகவும் வசதியாகிப் போனது.
இதைப் பார்த்த எல்லோரும், ” என்னடா, இவ்வளவு கிறுக்கா இருக்கான்?” என்றுப் பேச ஆரம்பித்தனர். பாண்டி, சும்மா இருக்காமல், தனது அளவுகோலில் “லதா.பாண்டி” என்று எழுதி தாமுவிடமே காண்பித்தான்.
“டேய், ஏன்டா.. இப்படி பண்றா??
“நான், என் பேரத் தானே எழுதி இருக்கேன்… உனக்கென்ன?”
“டேய்.. வேண்டாம்டா…. நீ… “தா.பா” தானே எழுதணும்”
“போடா.. ஏன் தாத்தா பேரு “லட்சுமணன்”.. எங்கப்பா பேரு ஒனக்குத் தெரியுமில… அப்புறம் என்னடா?”
“டேய்.. இதெல்லாம் ஓவர்டா… தாத்தா இன்ஷியலெல்லாம் யாரும் போடமாட்டங்க டா” என்ற தாமு, முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதன்பிறகு சில காலம் இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை. மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு பழனிக்குப் போன போதுகூட பேசாமலேயே விளையாடி வந்தனர். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தப் போது பத்தாம்பசலித்தனமாக இருந்ததை நினைத்து, இப்பொழுது வெட்கித் தலைகவிழ்ந்தான் பாண்டி.
பத்தாம் வகுப்பிற்கு பின் தாமு, ஐ.டி.ஐ. படிக்கச் சென்றான். பாண்டி அதே பள்ளியில் கலைப்பிரிவில் படிக்க, லதா கணித அறிவியல் பிரிவில் படிக்க, “பார்வை ஒன்றே போதுமே” என்றிருந்த நிலையும் மங்கத் தொடங்கியது. விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தங்கம் டெய்லர் கடையில், பாண்டியும் தாமுவும் பிற நண்பர்களுடன் சதுரங்கம் விளையாடிய ஞாபகம் துளிர்க்க, “தங்கம் டெய்லர் அண்ணன் இப்பவும் திருப்பூர்ல தான் இருப்பாரோ?” என்று சிந்திக்கத் தொடங்கியவன், மீண்டும் தாமுவை நோக்கியே பறந்தான்.
படிப்பிற்கு பின் இருவரும் கால ஓட்டத்தில் அவ்வப்போது ஊரில் கோவில் திருவிழாக் காலங்களில் சந்தித்துப் பேசிய நினைவுகளும் பளிச்சிட்டன. அப்போது தாமு ஒசூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்தாண்டிற்கும் முன் ஈரோட்டிற்கு பணிநிமித்தமாக பாண்டி வந்தப் பின்னர், தாமுவை சந்திக்கவே இல்லை. பத்தாம் வகுப்பு படித்து இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தக் கொரோனா காலத்தில் நட்பை புதுப்பிக்கும் வாய்ப்பை நினைத்து அகமகிழ்ந்தான் பாண்டி.
மாலையில் தாமுவிடமிருந்து பதில் வரவே, உடனே கைபேசி எண்கள் பரிமாறப்பட்டன. சிறிது நேரத்திலேயே தாமுவிடமிருந்து அழைப்புவர, ஆழ்ந்த பரவசத்தில் அழைப்பை எடுத்தான்.
“ஹலோ, பாண்டி”
“டேய்… தாமு.. எப்படியிருக்க?”
“நல்லா இருக்கேன்டா…”
என்று ஆரம்பித்து வழக்கமான குடும்ப நல விசாரிப்புகள் இருவருமிடையே நீண்டது.
“நம்ம ப்ரெண்ட்ஸ் யாரையெல்லாம் பாத்தடா, தாமு?” என்ற பாண்டி, “லதாவை அதன்பின்னாடி பாத்தியா?” என்று கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே….
“மகேந்திரன், ராமு, அழகுராசா, முத்து, ராசா, சக்கணன பாத்தேன்டா… நம்ம ஸ்கூல இப்ப நமக்குப் பின்னாடி படித்த பசங்க, பிள்ளைக தான் டீச்சர்ஸா இருக்காங்கடா” என்று தான் பார்த்த நண்பர்களின் நினைவுகளைக் கூறிக்கொண்டே வந்தவன்,
“விமலாவை பார்த்தேன்டா.. ஒரு பிள்ளையோட நின்னுக்கிட்டு இருந்ததுடா… பேசலாமானு யோசித்தேன்… அப்புறம் எதுக்குனு பேசாம வந்துட்டேன்டா… கூட இருந்தது அது பொண்ணு போல”
“அந்தப் பிள்ளைக்கு ரெண்டும் பசங்க தான்டா.. ஏன்டா பேசியிருக்கலாம்ல”
“பிள்ளைகள எல்லாம் பாத்தா, பேசாம இருப்பதுதான்டா நல்லது… நம்மளால எதுவும் ப்ராப்ளம் வரக்கூடாதுல.. அதுகளா பேசினா பேசிக்கணும்டா” என்ற தாமுவை நினைத்துப் பூரித்து மௌனமானான் பாண்டி.
– கதைப் படிக்கலாம் – 88
இதையும் படியுங்கள் : அன்னம் பால்….




