– சத்யஸ்ரீ

சில வருடங்களுக்கு முன்பு வரை என்னிடம் யாராவது, ‘நீ உன்னைவிட நாற்பது வருடங்கள் மூத்தவரிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வாய். அதுவும் உன் வயதை ஒத்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடன் வேலை செய்பவர்கள் போன்ற எவரிடமும் பகிர்ந்துக்கொள்ளாத விஷயங்களை, அவரிடம் பகிர்ந்துக்கொள்வாய்’ என்பதுபோல் சொல்லியிருந்தால், நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன்.
ஆனால்………
அது எப்படி நடந்தது என்று, இன்று வரை எனக்கு ஆச்சரியமாக உள்ளது. வெகு இயல்பாக, இயற்கையாக, படிப்படியாக நடந்தது.
இரு வருடங்களுக்கு முன்னர்தான் எனக்குக் கல்யாணம் ஆனது. போன வருடம் குழந்தைப் பிறந்தது. ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த அபார்ட்மெண்ட்டை விலைக்கு வாங்கி, இங்குக் குடியேறினோம். எனவே சுருக்கமாகச் சொன்னால், எனக்கு இந்த இருபத்து எட்டு வருடங்களாகத் தெரிந்தவர்களை விட, இந்த ஆறு மாதத்தில் பழகிய ஒருவர்தான், ரொம்பவே நெருக்கம் ஆகிவிட்டார்.
முகிலன் ஸார், எங்கள் அடுக்ககத்தில் (அபார்ட்மெண்ட்டில்) வசிக்கிறார். அறுபத்தெட்டு வயதாகிறது. காலையில் இருவரும் ஒன்றாக (அடுக்ககத்தின் வளாகத்துக்குள்ளேயே) நடைப்பயிற்சி செல்வதில் சிநேகிதர்கள் ஆனோம். ஆரம்பத்தில் சும்மா சிரித்துக் கொள்வதோடு சரி. பிறகு இருவரும் ஒரே வேகத்தில், ஒரே நேரத்தில் நடக்க ஆரம்பித்தோம். பிறகு பொது விஷயங்களை நிறையப் பேச ஆரம்பித்தோம். அப்போதே எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அதாவது எனக்கும் அவருக்கும் எண்ணங்கள், கருத்துகள், பார்வைகள் போன்ற பலப்பல விஷயங்களில் ஒத்துப்போனது. அதற்குள் சில மாதங்கள் ஓடி விட்டிருந்தன.
பிறகு எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல்களின் சுருக்கம் இவைகள்தான்.
“ஒரே பிரச்சனையா இருக்கு ஸார். சில சமயங்களில் தோணுது, ஏன் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோமோன்னு” என்பேன்.
“விடு அருண். இந்த மாதிரி கஷ்டங்கள் வர்றதுதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். இல்லன்னா ரொம்ப அலுப்புத் தட்டும். ஆனா ஒண்ணு. பிரச்சனைகளை சும்மா விட்டுடக்கூடாது, சரியான முறையில், சரியான நேரத்தில் தீர்க்கலன்னா, அதுங்க நம்மளை தீர்த்துடும்” என்பார்.
“இந்த வயசுலயே நிறைய சுமைகளைச் சுமக்க வேண்டியிருக்கேன்னு கடுப்பா இருக்கு ஸார்”
“புரியுது. உங்கத் தலைமுறைல பெரிய பிரச்சனைகளை சின்ன வயசுலயே சந்திக்கறீங்க. அதுக்கு முக்கியமான காரணம் — பெரியவங்களோட சேர்ந்து வாழாம, தனிக்குடித்தனம் போயிடறதுதான்.”
“அவங்க எங்களைப் புரிஞ்சுக்காம ரொம்ப தொந்தரவா இருக்காங்க. அவங்கக் கூட ஒரே வீட்ல இருக்கறது கஷ்டம் ஸார்”
“சகிப்புத்தன்மை சுத்தமா கிடையாது, அதனால எல்லாரும் விலகியே இருக்கீங்க”
“என்னதான் ஸார் பண்றது?”
“கல்யாணம் ஆன ஆரம்பத்துல, உனக்கும் உன் மனைவிக்கும் மொதல்ல நல்ல புரிதல் வரணும். அந்த சமயத்துல தனியா இருங்க, தப்பேயில்ல. ஆனா குழந்தைகள் பிறந்து அவங்கப் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கும்போது, அதாவது கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷங்கள்ல, உங்க ரெண்டு பேருக்கும் முட்டல்/மோதல்கள் எல்லாம் முடிஞ்சிருக்கணும். அந்தக் கால கட்டத்துல உங்க உறவு சரியா போகுதான்னு தெரிஞ்சிக்க சில அறிகுறிகள் இருக்கு.
மொதல்ல, அவளுக்கு எதைப்பத்தி பேசினா வருத்தமோ/கோபமோ வரும்ன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கணும். இதெல்லாம் கல்யாணம் ஆன சில மாதங்கள்லயே உனக்குத் தெரிஞ்சிடும் தான். ஆனா ஆரம்பத்துல அதைப்பத்தி அப்பப்ப பேசி தெரிஞ்சோ / தெரியாமலோ அவளை எரிச்சல்படுத்தியிருப்ப. அதெல்லாம் அஞ்சாறு வருஷங்கள் கழிச்சு சுத்தமா மறைஞ்சு போயிருக்கணும். உனக்குப் பிடிக்காததை அவ செஞ்சா, அதை குத்திக் காட்டாம பொறுமையா ஏத்துக்கற மனநிலை உனக்கு வந்துருக்கணும். அவளுக்கும் அதே மாதிரிதான்.
அடுத்து – அவளுக்கான தனிப்பட்ட நேரம். உனக்காகவும், உங்க குழந்தைகளுக்காகவும் ஆன நேரம் செலவழிச்சது போக, அவளுக்காக தனிப்பட்ட நேரம் ஒதுக்கி, அவளுக்குப் பிடிச்சதைச் செய்ய நீ இடம் தரணும். அதே மாதிரி உனக்கும் தனிப்பட்ட நேரம் தேவை, முகம் சுளிக்காம அவளும் அதைத் தரணும்.
அதிக பட்சமா அஞ்சாறு வருஷங்கள்ல இந்தப் புரிதலை நீங்க ரெண்டு பேரும் அடைஞ்சிருக்கணும். அப்படி அடைஞ்சிட்டா, வீட்டுப் பெரியவங்களை உங்கக்கூட கொண்டு வந்து வெச்சிக்கலாம். அப்ப உங்க பெற்றோர்கள் கிட்டயும் மொதல்லயே தெளிவா பேசிக்கோங்க – எதெது வேலைக்கு ஆகும், ஆகாதுன்னு. நீயும் உன் மனைவியும் மட்டும் அனுசரிச்சுப் போகணும்ன்னு நான் சொல்லல, பெரியவங்களும் தங்களோட பிடிவாதத்தையும், அணுகுமுறையையும் மாத்திக்கிட்டாதான் எல்லாமே நல்லா நடக்கும்.
பெரியவங்க கிட்ட நீ என்ன பேசணும்ன்னா… அவங்களுக்குத் தேவையானதை உன் மனைவியும் நீயும் பண்ணுவீங்க, அதே மாதிரி நீங்க செய்ய நினைக்கற பல விஷயங்களுக்கு, அவங்க சும்மா சும்மா முட்டுக்கட்டை போடக் கூடாது.”
“நீங்க சொல்றது எல்லாமே சரி, ஆனா நடைமுறைக்கு இதெல்லாம் ஒத்து வருமா ஸார்? அவங்களுக்கு ஏத்த மாதிரி அவ நடந்துக்க மாட்டா, அவளுக்கும் எனக்கும் ஒத்து வர்ற மாதிரி, அவங்களும் நடந்துக்க மாட்டாங்க. அவங்களையும் அவளையும் ஒரே வீட்ல வெச்சிருந்தா, எனக்குத்தான் ஏழரை பிடிக்கும்”
“அவங்களுக்கு ஏத்த மாதிரி அவள் மொத்தமா மாறவும் முடியாது, அவளுக்கு ஏத்த மாதிரி அவங்களும் மாற முடியாது. யாரும் மொத்தமா மாறவும் வேணாம். ஆனா, சின்னச் சின்ன விஷயங்களை மாத்திக்கிட்டு, அனுசரிச்சுப் போனா, நிறைய நல்ல விஷயங்கள் நடக்குமே?
சில உதாரணங்கள் சொல்றேன்.
அவங்க பீட்ஸா சாப்பிட வேணாம், ஆனா அவள் சாப்பிட்டா அதைப் பத்திக் குத்தலா எதுவும் சொல்லாம இருக்கலாமே? எல்லா நாளும் அவங்க சொல்ற மாதிரி உன் குழந்தைக்கு ஆடைகள் உடுத்த வேண்டாம், ஆனா ஒரு நாள் அவங்க சொல்ற மாதிரியும், இன்னொரு நாள் உன் மனைவிக்குப் பிடிச்ச மாதிரியும் உடுத்தலாமே? எப்படியும் பெரியவள் ஆனா… உன் பெண்ணே அவள் விருப்பப்பட்ட மாதிரிதான் உடுத்துவா, அப்ப யார் பருப்பும் அவகிட்ட வேகாது.
அவங்களுக்கு வெளியில் சாப்பிட்டா ஒத்து வரலன்னா, உன் மனைவி சமைக்கறதை சாப்பிடட்டும். ஆனா உன் மனைவியோ இல்ல நீயோ வெளில சாப்பிடறதை அவங்க குத்தம்/குறை சொல்லக்கூடாது.
இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். ஒரு வீட்ல இருக்கறது ஒத்து வரும்ன்னு முடிவு பண்ணிட்டா, அதை நிறைவேற்ற ஆயிரம் வழிகள் இருக்கு. ஆனா அதில்லை பிரச்சனை. பிரச்சனை எங்க இருக்குன்னா, ஒருத்தரை ஒருத்தர் “உண்மையாவே” மதிக்கறாங்களாங்கறதுல தான் இருக்கு. அதுதான் உறவுக்கு அடிப்படை.
அன்றாட வாழ்க்கைல வர்ற சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் எதுவும் பெரிசாவே தெரியாது – அந்த அடிப்படை சரியா இருந்தா. அது சரியா இருக்கான்னு நீ கொஞ்சம் ஆழமா இறங்கி ஆராய்ந்துப் பாரு. நிறைய விஷயங்களை கவனி. யாரு யாரைப் பத்தி எந்த சூழ்நிலைகள்ல விட்டுக்கொடுத்து பேசறாங்க, எப்ப வருத்தப்பட்டு பேசறாங்க, இப்படி நிறைய விஷயங்களை கவனி. அதுவே உனக்குச் சொல்லிடும் – அவங்க எல்லார்கிட்டயும் அடிப்படை அன்பு இருக்கா? இல்ல வெறுப்பு இருக்கா? ன்னு. அவங்களுக்குள்ள எந்தக் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒருத்தருக்கு உடம்பு சரியில்லன்னா அந்த நிமிஷம் மத்த எல்லாத்தையும் மறந்து, அவங்களை கவனிச்சுப்பாங்க பாரு, அது ஒண்ணே போதும்”
“அது எல்லாம் நிச்சயம் இருக்கு ஸார். நானே அதை பல சமயங்கள்ல பார்த்துருக்கேன். ஆனாலும் அவங்களை எங்க வீட்ல வெச்சுக்க இவ ஒத்துக்க மாட்டேங்கறா. அவங்களும் இவகூட இருக்க ஒத்துக்க மாட்டேங்கறாங்க. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். ஆனா எல்லாரையும் ஒரே வீட்ல வெச்சுக்க முடியலையேன்னு இருக்கு”
“நிச்சயம் நீ நெனச்சது நடக்கும். உன் மனைவி, அப்பா, அம்மா மூணு பேர்ல யாராவது நறுக்குன்னு பேசுவாங்களா? குத்தல் பேச்சு உண்டா? ரொம்பவே மத்தவங்களைத் திட்டுவாங்களா?”
“அதெல்லாம் எதுவும் இல்ல ஸார். கொஞ்சம் முணுமுணுப்பு இருக்கும். முட்டல் உரசல் இருக்கும். ஆனா யாரும் யாரையும் பார்த்து கத்திப் பேசமாட்டாங்க, திட்ட மாட்டாங்க. எது ஒண்ணு சொல்லணும்ன்னாலும் என் மூலமாதான் சொல்வாங்க.”
“இது போதுமே, சுலபமா எல்லாரையும் ஒண்ணா சேர்த்துடலாம். நான் சொல்றபடி செய், எந்தக் கேள்வியும் கேட்காம. அப்பறம் பாரு” என்று அந்த ரகசியத்தைச் சொன்னார்.
முயன்றேன். ஆரம்பத்தில் வழக்கம் போல் பிடிவாதம் பிடித்தவர்கள் சீக்கிரமே ஒத்துக் கொண்டார்கள் – துணைவியார், பெற்றோர் எல்லோரும். நான் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான். என் பல நாள் கனவு நிறைவேறப் போகுதே.
ஏற்கனவே இதை எதிர்பார்த்துதான் மூன்று அறைகள் இருக்கும் வீட்டை அடுக்ககத்தில் வாங்கியிருந்தேன். ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்களை அழைத்து வந்து குடியமர்த்தினோம்.
முதல் ஒரு மாதத்தில் எப்போது அவர்களுக்குள் சண்டை வந்து என் தலை உருளுமோ என பக்பக்கென்று இருந்தது. ஆனால் நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
சில மாதங்கள் எண்ணெயில் வழுக்கிக் கொண்டு செல்வது போல மென்மையாக மிருதுவாக வழுவழுப்பாகச் சென்றன. அவர்கள் மூவரும் எப்படியோ நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள். இனிமேல் எந்தப் பிரச்சனையும் இல்லை. மனைவி இப்போதெல்லாம் அவர்களைப் பற்றிதான் அதிகம் பேசுகிறாள், மன்னிக்கவும், புகழ்கிறாள். அவர்களும் இவளைப் போல் ஒரு பெண் உண்டா என உண்மையாகவே வாயாரப் புகழ்கிறார்கள்.
அப்படி என்ன ஐடியா கொடுத்தார் முகிலன் ஸார்? என்றுதானே யோசிக்கிறீர்கள்.
என் மனைவியிடம் சொன்னேன் – “நமக்கு வயசாகும்போது நம்மளை நம்ம பொண்ணோ, பையனோ பார்த்துக்கலன்னா கூட பரவாயில்ல. ஆனா பெரியவங்க கூட இருக்கற அருமை அவங்களுக்கு எப்படி தெரியும்? அதை மொதல்ல நாம அவங்க கண் முன்னாடியே செஞ்சிருந்தாதான? இது வாழையடி வாழையா வர வேண்டிய விஷயம். என் தாத்தா, பாட்டியோட இருந்தப்ப, அவங்கத் தினமும் சொன்ன கதைகள் மூலமாதான், பல நல்ல பழக்கங்கள் எனக்குத் தெரியாமலே எனக்குள்ள வந்தது. இப்ப என்னோட அப்பா/அம்மாவை நம்மகூட வெச்சிக்காம தனியா வெச்சிருந்தா, நம்மப் பசங்களுக்கு எப்படி அந்த விஷயங்கள் எல்லாம் கிடைக்கும்? அது நாம நம்ம குழந்தைகளுக்கு பண்ற பாசப் பறிப்பு இல்லையா?”
என் பெற்றோர்கள் கிட்டச் சொன்னேன் – “உங்க பொண்ணுகிட்ட குறைகள் இருந்தா ஒரேயடியா அவளை விலக்கி வெச்சிருப்பீங்களா? எப்படிச் சொல்லணுமோ அப்படி சொல்லித் திருத்துவீங்கதான? உங்களுக்கு மத்தியில இருக்கற அசெளகிரியங்களைப் பேசி சரி செஞ்சுக்காம, இப்படி விலகியே இருக்கறதால நானும் என் குழந்தைங்களும்தான பாதிக்கப்படறோம் – எங்களுக்கு உங்களோட அருகாமை கிடைக்கறதே இல்ல. நீங்க ரெண்டு பேரும் என் மனைவியும் மனசுவிட்டுப் பேசி, அவளுக்கு உங்ககிட்ட என்ன வேணும், உங்களுக்கு அவகிட்ட என்ன வேணும்ன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதை ஒருத்தருக்கொருத்தர் எப்படி விட்டுக்கொடுத்து அனுசரிச்சுப் போகணும்ன்னு பேசி முடிவு பண்ணிட்டா, எல்லாம் நல்லபடியா நடக்கும்தான? நான் உங்கமேல பெருசா எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்கல. என்கூட இருக்கணும்ன்னு உண்மையாகவே உங்களுக்கு ஆசையும் பாசமும் இருந்தா, இதை நிச்சயம் பண்ணுவீங்க. இல்லைன்னா நான் ஒண்ணும் சொல்ல முடியாது”
அதன்பிறகு அவர்கள் மூன்று பேர் மட்டும் பேசினார்கள். நான் அங்கே இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவர்களும் என்னை வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இதுவும் முகிலன் ஸார் எனக்குச் சொல்லிக் கொடுத்தது.
என்னென்ன பேசினார்கள் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள், சம்மதித்துக் கொண்டார்கள். அதன்படி நடந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் இருந்த ஆரோக்கிய நெருக்கத்தையும் இடைவெளியையும் நான் மதித்து, சற்றே விலகி இருந்தேன், அது பலன் தந்தது.
என்னைவிட பாக்கியசாலி உண்டா?
– கதைப் படிக்கலாம் – 145




