– ரா. கார்த்தி

பங்கஜம்…
வானம் வெட்ட வெளியாய் இருந்தது. எல்லாம் நடந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், அவர் தன் கணவன்தான் என பங்கஜம் திடகாத்திரமாக நம்பினாள். நிராதரவற்றப் பொழுதுகளில், நம்பிக்கையைத் தவிர வேறென்ன உற்ற துணையாக இருந்துவிட முடியும்? ஆனால் பொழுதுகளுக்கான நம்பிக்கைகள், காலங்களுக்கானதாய் நீட்சியடையும் போது, அதன் அடர்த்தியை, அது இழந்துவிடுவது இயல்புதானே!
கைகளைக் கோர்த்து கடற்கரைகளுக்கும், பூங்கா நடைபாதைகளுக்கும், நடந்து செல்ல வேண்டும் என்பது இவளின் ஆசையாக இருக்கவில்லை. உடன் இல்லாவிட்டாலும், மாதம் ஒருமுறை நலம் விசாரிக்கமாட்டாரா என ஏங்கியிருந்தாள்.
லிபோமா என்கிற கொழுப்புக் கட்டியின் பாதிப்புகள் உடலில் தோன்றி, எண்ணி மூன்று மாதத்தில், வேறு திருமணத்திற்கு தயாராகி விட்டிருந்தார், சுப்பு. இந்த மூன்று மாதங்களின் ஒவ்வொரு இரவுகளிலும், பிரவாகமிட்ட கண்ணீர் அவளுக்கு ஒரு விடயத்தினை தெளிவுப்படுத்தியது. இனி சுப்பு தன்னுடன் இருக்கமாட்டார் என்கிற தெளிவுக்கு, 80-வது இரவின் இறுதியில் வந்து சேர்ந்தாள்.
தான் பெற்றத் தெளிவுக்கும், அதை நடைமுறை சாத்தியத்தில் எதிர்கொள்வதற்கும், ஓராயிரம் தொலைவு இடைவெளியிருந்தது. தன் மீதான வெறுப்புணர்வும், அக்கறையின்மையும், தன் வாழ்நாட்களையெல்லாம் யாரோ ஒன்று திரட்டி, அடிவானத்தில் தீயிட்டு அதுப் புகையத் தொடங்கியதாய் எண்ணத் தொடங்கினாள். கணவன் மீதான எதிர்பார்ப்புகள் பொய்யாகிப் போயின. இந்த ஒன்பது ஆண்டுகளில் தான் புறக்கணிக்கப்பட்ட உணர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஒட்டு மொத்த ஆண்களின் மீதான அருவருப்பாய் பரிணாமமடைந்திருந்து.
பங்கஜத்திற்கு குழந்தைகளே பிடிக்காது. உடல் முழுக்கக் கொழுப்புக் கட்டிகளைக் கொண்ட லிபோமா நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களை, எந்த குழந்தைக்குத்தான் பிடிக்கும்!… வேறொரு மனைவி மக்களோடு, எங்கோ வடநாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கும், கணவனின் கருப்பு வெள்ளைப் புகைப்படமும், நைலான் புடவையும்தான் அவளின் சொத்துக்களாக சேர்த்து வைத்திருந்தாள்.
அவள் வசிக்கும் தெருவில் நடக்கும் எந்த ஒரு நல்ல விசேஷத்திற்கும் அவளுக்கு அழைப்பு வராது. உண்மையில் அவள் அதை தவிர்த்து விடுவாள். இது புதியதல்லவே. கடந்த ஒன்பது வருடங்களாக தன்னை ஒதுக்கிய மனிதர்களை, அவர்களுக்கு முன், இவளே தற்போது வெறுக்கப் பழகிக் கொண்டாள்.
ஆனால், குழந்தைகளை இப்படி புறக்கணிக்க முடியாதே! ஆனாலும், புறக்கணித்தாள். அந்த மீறலுக்கான உந்துதல் எத்தனை அழுத்தமாக இருந்திருக்கும்?! யாருமில்லாத போது, ஏதேனும் ஒரு குழந்தை கண்ணில் தென்பட்டுவிட்டால், தன் கைப்பையில் வைத்திருக்கும் சாக்லேட்டினை குழந்தை கைகளில் திணித்துவிட்டு, சட்டென தூக்கி இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்துவிட்டு, கீழே விட்டுவிடுவாள். என்ன நடந்தது என குழந்தை யோசிப்பதற்குள்ளாகவே, எல்லாம் நடந்து முடிந்திருக்கும். பங்கஜம் அந்த இடத்தை விட்டு அதே வேகத்தில் நகர்ந்திருப்பாள்.
ஏப்ரல்…
ஏப்ரல் என்கின்ற பெயரை நான் கேட்டபோது வித்தியாசமாக இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்டேன். அவள் அதே பெயரை அழுத்தமாக உச்சரித்து சொன்னாள். “ஏன் உங்களுக்கு இந்த பெயர்?” எனக் கேட்டதற்கு, என் பெயரின் அர்த்தத்தினை விசாரிக்க தொடங்கி விட்டாள்.
சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு, என்னுடைய செல்போனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. மறு முனையில் அவள்தான் பேசுவதாகவும், விசேஷம் ஏதுமில்லை, வெறுமென தான் அழைத்ததாகவும் சொல்லிக் கொண்டாள். இரவெல்லாம் எஸ்.எம்.எஸ்.-கள் தொடர்ந்தன. அவளின் குறுஞ்செய்திக்கு பதிலளிக்க தாமதமானால் என்மீது அவளும், என்னுடைய குறுஞ்செய்திக்கு பதிலளிக்க தாமதமானால் அவள் மீது நானும், போலியான கோபம் கொண்டோம்.
பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள அவளைப் பார்க்கச் சென்றபோது, உள்ளம் பூரித்துபோய் முத்தம் ஒன்றை கொடுத்தாள். என் வாழ்வில் நான் வாங்கிய அற்புதமான முத்தமது. சொல்லிக் கொள்ளாமலேயே காதலித்துக் கொண்டோம். எத்தனை நாட்கள் என தெரியாமல், மூன்று வருடங்கள் முழுதாய் கரைந்தது. வீட்டில் விடயத்தை சொல்ல, மதப் பாகுபாடுகள் தலைதூக்க தொடங்கியது. பிரிவதாய் சொன்னாள். இருவரும் அழுது பிரிந்தோம்.
சூரியன் அஸ்தமிக்காத நாளொன்றில், மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தோம். அவளுக்கு என்மீது நம்பிக்கை இல்லையென வெளிப்படையாய் கூறினாள். என்மீது மட்டுமல்ல, வேறெந்த ஆண் மீதும் நம்பிக்கையில்லை என சொன்னாள். “நிம்மதியான உறக்கம் கண்டு இரண்டாண்டு காலம் நான் தவித்திருந்தேன். இருளின் கைகள் என் உடல் அங்கங்களில் விளையாடுவதை நான் முற்றிலும் வெறுக்கிறேன். இருளை வெறுக்கிறேன். நாள் முழுவதும் ஆயிரம் விளக்குகளின் கீழ் நான் இருந்தாலும், எனக்கு அந்த ஒளி போதுமானதாக இருக்காது.
“அவள் ஒரு அகதியின் மனநிலையை ஒத்திருந்தாள். நிச்சயமில்லாத சூழலில் தான் எப்போதும் நின்றுக் கொண்டிருப்பதாகவே அவள் உணர்ந்தாள். இவை எல்லாவற்றிற்கும் சகோதரன்தான் காரணமெனவும், ஒரு மூன்றாம் தர மனிதன் போல தன்னிடம் அவன் நெருங்கியதாகவும் கூறிய அவளால், அடுத்த வார்த்தையைக் கூடச் சொல்ல முடியாமல், பார்வையால் என் கண்களைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அழவில்லை. அவள் அழுது விட வேண்டும் என நான் விரும்பினேன். ஆனால், அவள் கண்களிலிருந்து நீர் துளிர்க்கவில்லை. அவள் திடீரென சிரிக்கத் தொடங்கினாள். உண்மையில் சிரிப்புகள் ரசிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், முடிவில்லாத சிரிப்புகள் எப்போதும் ஆபத்தானவையே! எல்லாமும் அன்றையோடு முடிந்தது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் நுங்கம்பாக்கம் நிறுத்தத்தில் ஏறினேன். மழை ஓய்ந்துவிட்டிருந்தது. பெட்டிகள் முழுக்க மனித கால்களின் ஈரம்பட்டு, மனித பாதங்களின் வடிவமாய் சகதி கலந்திருந்தது. என்னுடைய வலதுப் பக்கத்தில் பங்கஜம் இருந்தாள். வயது தன் இஷ்டத்திற்கு அவளோடு கண்ணாமூச்சியாடியிருந்தது.
அதன் பின் இருக்கையில் ஏப்ரல். அதே வாலிபத்தோடு! ஏப்ரல் ஜன்னலை வெறித்து நோக்கியிருந்தாள். ஏதோ கனவுப் போல இருந்தது. என் வாழ்க்கையில் நான் கண்ட இரு வேறு கதாபாத்திரங்கள், ஒரே இடத்தில்! எனக்கு இடது பக்கமாக இருந்த இருக்கையிலிருந்து குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டே, வலது பக்கத்திற்கு நகர்ந்தது. பங்கஜம் குழந்தையை பார்த்தாள். ஏப்ரலும் பார்த்தாள். நான்கு வயதை ஒத்திருந்த அந்த சிறு ஆண் குழந்தையை, இரு வேறு கண்களும் பார்த்துக்கொண்டே இருந்தது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை பங்கஜம், அந்த குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, தன்னிடமிருந்த பேனாவை வைத்து வேடிக்கைக் காட்டத் தொடங்கிவிட்டாள்.
ஏப்ரல் ஒருபோதும் மறுபடியும் அந்த குழந்தையை பார்க்கவில்லை. மீண்டும் அவள் ஜன்னல் வழியே வானத்தை பார்க்கத் தொடங்கினாள். மழை சடசடவென பெய்யத் தொடங்கிவிட்டது. நான் கிண்டியிலேயே இறங்கிவிட்டேன். டிக்கெட்டை எடுத்துப் பார்த்தேன்… நான் இறங்க வேண்டியது தாம்பரம்!
யார் சொல்லியது காலங்கள்தான் எல்லாவற்றிற்குமான மருந்து என?!
– கதைப் படிக்கலாம் – 23
இதையும் படியுங்கள் : மூன்று எழுத்து



