ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி மாணவிகளுக்கு ₹1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அதிகாரியாக சமூக நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் மாணவிகள் படித்துள்ளார்களா என்பதை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்யும். உயர்கல்வித்துறை விண்ணப்பங்களை பெற்று வழங்கும். அதோடு, மாணவிகளுக்கு டெபாசிட் இல்லாத வங்கிக் கணக்குகளை தொடங்கவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாணவிகள் உயர்கல்வியில் தொடர்கிறார்களா என்பதையும் சரிபார்த்து சான்றளிக்கும். மாதந்தோறும் 7ம் தேதி ₹1,000 அனுப்புவதற்கான உத்தரவுகளை சமூக நலத்துறை இயக்குநர் பிறப்பிப்பார்.
இத்திட்டத்தை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படுகிறது. மேலும், மாநில திட்ட மேலாண்மை குழு அமைக்க்கப்பட்டு திட்டம் கண்காணிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன்பெற முடியும்?
*6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
*6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து ஐடிஐ,டிப்ளமோ படிப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
*முதல் உயர்கல்விக்கு மட்டுமே உதவித்தொகை பெறமுடியும்.
*ஒருங்கிணைந்த முதுகலைக் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
*தொலைநிலைக்கல்வியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
*ஐடிஐ படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு. பொறியியல் படிப்புக்கு 4 ஆண்டுகள், வேளாண் படிப்புகளுக்கு 4 ஆண்டுகள்,மருத்துவ படிப்புகளுக்கு 5 ஆண்டுகள், சட்டம் &பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு 3-5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறமுடியும்.
*உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயமாகும்.
*பயன்பெற விரும்பும் மாணவிகள், தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




