டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற கோரி, கடந்த 6 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றிகையிட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்காக, சில விவசாயிகள் 6 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன் டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். தற்போது இந்தப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுக்குறித்து கனடா நாட்டின் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “உரிமைகளைப் பாதுகாக்க விவசாயிகள் ஒன்றினைந்து நடத்தி வரும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதுமே ஆதரவளிக்கும்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 48 வயதாகும் இவர், கனடா நாட்டின் 23-வது பிரதமர் ஆவார். கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தான், தலைநகரில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத் தலைவர் ஆவார்.
விவசாயிகளின் போராட்டம் மெல்ல மெல்ல அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், இதுக்குறித்து அரசு வெகு சீக்கிரமாக நல்ல முடிவை எடுக்கும் என நம்புவதாக விவசாயிகள் தரப்பில் நம்பிக்கையுடன் கூறப்படுகிறது. விவசாயிகளின் இந்தத் தொடர் போராட்டத்தை அடுத்து, மத்திய அரசு வரும் 3-ஆம் தேதி விவசாயிகளின் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விவசாயிகள் பிரச்சனைக்கு இன்னும் 2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால், டிசம்பர் 3-ஆம் தேதி முதல் டாக்சிகள் இயங்காது என்று அகில இந்திய டாக்சி சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.