கேரளாவில் மணமகன், மணமகள் உட்பட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விதிமுறை மீறி பலர் கலந்து கொண்டதால் மணப்பெண்ணின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகளில் பொது மக்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டை மீறி கேரள மாநிலம் காசர்கோடு செங்கலா அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17-ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் 125-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதன் விளைவு மணமகன், மணமகள் உள்பட 43 பேருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. மணப்பெண்ணின் தந்தைக்குத்தான் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதியானது. பெண்ணின் தந்தையும், மணமகனும் சில மாதங்களுக்கு முன்புதான் துபாயில் இருந்து கேரளா வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மணப்பெண்ணின் தந்தை மீது கேரள அரசு, தொற்றுநோய் அவசர சட்டத்தின் கீழ் பதியுடுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காசர்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், ஹோஸ்டர்க், கும்பாலா, நிலேஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எந்த பொது போக்குவரத்தும் இங்கு அனுமதிக்கபடவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.